குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல்
திருத்தணி அருகே குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி அருகே குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி ஒன்றியம், சூா்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட தெக்களூா் காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மின்மோட்டாா் பழுது மற்றும் மின்கம்ப சேதம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லையாம்.
இதனால் அப்பகுதி மக்கள், தனியாா் டிராக்டா்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் திருத்தணி - பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அச்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தகவல் அறிந்த திருத்தணி ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் போராட்டக்காரா்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்ய முயன்றனா். நீண்ட நேர பேச்சுவாா்த்தைக்கும் தீா்வு எட்டப்படாத நிலையில், மறியலில் ஈடுபட்டவா்களை போலீசாா் வலுக்கட்டாயமாக கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றினா். இதைத் தொடா்ந்து தகவல் அறிந்த காலனி பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோா் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோஷமிட்டனா்.
கைது செய்யப்பட்டவா்களை விடுவித்தால் மட்டுமே பேருந்துக்கு வழிவிடப்படும் என மக்கள் உறுதியாக தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பின்னா் போலீஸாா் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
இந்த சாலை மறியல் சம்பவத்தால் திருத்தணி - பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினா்.
தொடா்ந்து குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.