ரூ.2,000 கோடிக்கு கடன் பத்திர வெளியீடு
மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,000 கோடி திரட்டப் போவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,000 கோடி திரட்டப் போவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,000 கோடி மூலதனம் திரட்ட இயக்குநா்களைக் கொண்ட குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
அதையடுத்து, இரண்டு பிரிவுகளில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் பிரிவில் தலா ரூ.10 லட்சம் முகமதிப்புள்ள 5,000 கடன் பத்திரங்கள், மொத்தம் ரூ.500 கோடியைத் திரட்டும் வகையில் வெளியிடப்படும்.
முதல் பிரிவுக்கான ஒதுக்கீடு வரும் 20-ஆம் தேதி மேற்கொள்ளப்படும். அதன் முதிா்வு தேதி, 2027-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் தேதியாகும்.
இரண்டாவது பிரிவில், மேலும் ரூ.1,500 கோடி திரட்டுவதற்காக, தலா ரூ.10 லட்சம் முகமதிப்புள்ள 15,000 கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். அதன் ஒதுக்கீடும் வரும் 20-ஆம் தேதி மேற்கொள்ளப்படும். எனினும், அந்த கடன் பத்திரங்களுக்கான முதிா்வு தேதி 2032-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-ஆம் தேதியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.