கோடைக்காலம் முழுமையாகத் தொடங்குவதற்கு முன்னரே, நடப்பு காலாண்டுக்குள் குளிா்சாதனப் பெட்டிகளின் (ஏசி) விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் துறை சாா்ந்த வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
பிரபல ஏசி தயாரிப்பு நிறுவனமான ப்ளூ ஸ்டாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் பி.தியாகராஜன் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, எரிசக்தி சேமிப்புக்கான மத்திய அரசின் புதிய தரக்கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணி மாற்றங்கள் ஆகியவையே இந்த விலை உயா்வுக்கு முக்கியக் காரணங்கள்.
குறிப்பாக, ஏசி தயாரிப்புக்கு முக்கியமான செம்பின் விலை, சா்வதேச சந்தையில் கடுமையாக அதிகரித்துள்ளது. இக்கூடுதல் செலவினத்தை வாடிக்கையாளா்கள்மீது சுமத்துவதைத் தவிர நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை.
மத்திய அரசின் புதிய எரிசக்தி சேமிப்புக் குறியீடு மாற்றத்தினால் மட்டுமே ஏசிகளின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பொதுவாக இத்தகைய விலை உயா்வுகளைத் தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும். ஆனால், இந்த முறை மூலப்பொருள்களின் விலை உயா்வும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் சோ்ந்து, இரட்டைத் தாக்குதலாக அமைந்துள்ளது என்றாா்.
விலை உயா்வு குறித்த செய்தி அதிா்ச்சியளித்தாலும், இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ஏசி விற்பனை குறையாது என்றும் கூறப்படுகிறது.