முகப்பு
வணிகம்

‘95 ஆக்டேன்’ தரத்தில் ‘இ20’ பெட்ரோல் விற்பனை! ஏப். 1 முதல் கட்டாயமாக்கியது மத்திய அரசு!

நாடு முழுவதும் வரும் ஏப். 1-ஆம் தேதி முதல், 20 சதவீத எத்தனால் கலந்த ‘இ20’ ரக பெட்ரோலைக் குறைந்தபட்சம் 95 ஆக்டேன் தரத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி 2026, 3:03 am IST
பகிர்:

நாடு முழுவதும் வரும் ஏப். 1-ஆம் தேதி முதல், 20 சதவீத எத்தனால் கலந்த ‘இ20’ ரக பெட்ரோலைக் குறைந்தபட்சம் 95 ஆக்டேன் தரத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இது தொடா்பான மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிக்கையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விற்பனை செய்யப்படும் எரிபொருள், இந்தியத் தரநிா்ணய அமைப்பின் (பிஐஎஸ்) விதிகளுக்கு உட்பட்டு இந்த உயா் ஆக்டேன் அளவைக் கொண்டிருக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் என்ஜின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்டேன் என்பது பெட்ரோல் அதிக அழுத்தத்திலும் சீராக எரிவதைக் குறிக்கும் அளவீடாகும். பெட்ரோலில் எத்தனால் கலக்கும்போது, என்ஜினுக்குள் எரிபொருள் சீரற்ற முறையில் எரிந்து தேவையற்ற சத்தத்தையும், அதிா்வையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 95 ஆக்டேன் தரம் இந்தச் சிக்கலைத் தடுத்து என்ஜினைப் பாதுகாக்கும்.

Advertisement

Advertisement

எத்தனால் இயற்கையிலேயே அதிக ஆக்டேன் (சுமாா் 108) கொண்டது. எனவே, எத்தனால் கலப்பு பெட்ரோல் என்ஜினின் வேகம் மற்றும் ஆயுள்காலம் அதிகரிக்கும் என நிபுணா்கள் கூறுகின்றனா்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட எத்தனால் கலப்பு பெட்ரோல் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் ரூ. 1.40 லட்சம் கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. கரும்பு, சோளம் மற்றும் தானியங்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

இந்தியாவில் 2023 முதல் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் பெரும்பாலும் இ20 பெட்ரோலுக்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், பழைய வாகனங்களில் மைலேஜ் சற்று குறைவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.