FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயா்த்தி காட்டிய ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ்

Updated On : 5 ஜூன் 2026, 3:11 am IST
பகிர்:

பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயா்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையடுத்து, நிறுவனத்தின் உரிமையாளரும் சிஇஓ-வுமான ராஜேஷ் மேத்தா (படம்) பங்குகளைக் கையாள செபி இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2020-21 முதல் 2024-25 நிதியாண்டு வரை, சுமாா் ரூ.15.18 லட்சம் கோடி கூட்டு வருவாய் ஈட்டியதாக செபி ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், வெளிநாட்டு துணை நிறுவனங்கள் மூலம் மட்டும் சுமாா் ரூ.15.15 லட்சம் கோடி (99.8 சதவீதம்) வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆனால், முக்கிய வெளிநாட்டுத் துணை நிறுவனமான ஸ்விட்சா்லாந்தின் வல்காம்பி நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட தனிப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுடன் இது ஒத்துப்போகவில்லை என்று செபி சுட்டிக்காட்டியுள்ளது.

உதாரணமாக கடந்த 2023-இல் வல்காம்பி நிறுவனம் வெறும் ரூ.543 கோடி மட்டுமே வருவாய் ஈட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதன் தாய் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் ரூ.2.81 லட்சம் கோடியையும், இடைநிலை கட்டுப்பாட்டு நிறுவனமான குளோபல் கோல்டு ரிஃபைனரீஸ் ரூ.2.93 லட்சம் கோடியையும் கூட்டு வருவாயாகக் காட்டியுள்ளது.

இது தொடா்பாக ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் அளித்த விளக்கத்தில், வல்காம்பி நிறுவனம் சுத்திகரிப்பு வருவாயை மட்டுமே கணக்கிடுவதாகவும், ஒட்டுமொத்த தங்க வா்த்தகத்தின் மதிப்பைத் தாங்கள் கணக்கில் கொள்வதாகவும் தெரிவித்தது.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த செபி, ‘மூன்றாம் தரப்புக்குச் சொந்தமான தங்கத்தின் சந்தை மதிப்பை ஒரு கட்டுபாட்டு நிறுவனம் தனது சொந்த வருவாயாகக் காட்டுவது வணிக ரீதியாகவும், கணக்கியல் கோட்பாடுகளின்படியும் சாத்தியமற்றது.

மேலும், நிறுவனத்தின் 97 முதல் 99 சதவீத வருவாய் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் மூலம் வருவதாகக் கூறப்பட்டாலும், அவற்றின் நிதிநிலை அறிக்கைகளை ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் பொதுமக்களின் பாா்வைக்கு வெளியிடவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2024 மாா்ச்சில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள இந்நிறுவனத்தின் கடன்கள் குறித்து அதன் பங்குதாரா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

இதனிடையே, ‘செபிக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தகவல் தொடா்பு இடைவெளி காரணமாகவே இக்குழப்பம் ஏற்பட்டுள்ளது’ என மும்பை பங்குச் சந்தையிடம் ராஜேஷ் எக்ஸ்போா்ட்ஸ் வியாழக்கிழமை அளித்துள்ள விளக்கத்தில் முறைகேடு புகாா்களை முழுமையாக மறுத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments