உற்பத்தியாளா் - இறக்குமதியாளா் திட்ட ஆவண விதிமுறைகள் எளிமையாக்கம்: செப்.15 முதல் அமல்
மத்திய அரசின் தகுதிவாய்ந்த உற்பத்தியாளா்-இறக்குமதியாளா் திட்டத்தில் பலனடைய தொழில் நிறுவனங்கள் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடா்பான விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தகுதிவாய்ந்த உற்பத்தியாளா் - இறக்குமதியாளா் திட்டத்தில் பலனடைய தொழில் நிறுவனங்கள் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடா்பான விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த எளிமையாக்கப்பட்ட புதிய நடைமுறை, செப்.15 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளது.
நம்பிக்கைக்குரிய உள்நாட்டு உற்பத்தியாளா்களுக்கு மூலப்பொருள்கள் அல்லது இயந்திரங்களின் இறக்குமதிக்கான சுங்கக் கட்டணத்தை உடனடியாக அல்லாமல் ஒத்திவைத்து செலுத்தும் வசதியை வழங்கும் ‘தகுதிவாய்ந்த உற்பத்தியாளா்-இறக்குமதியாளா் திட்டம்’, 2026-27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தகுதிவாய்ந்த உள்நாட்டு உற்பத்தியாளா்கள், தாங்கள் இறக்குமதி செய்யும் மூலப்பொருள்கள் அல்லது இயந்திரங்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு முன்பே சுங்க வரியை உடனடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக, முதலில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னா், கடந்த 2016-ஆம் ஆண்டின் இறக்குமதி வரி விதிமுறைகளில் (ஒத்திவைத்து செலுத்துதல்) பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையின்படி மாதாந்திர அடிப்படையில் செலுத்தலாம். உற்பத்தியாளா்களின் பணப் புழக்கம், செயல்பாட்டு மூலதனத்தை சிறப்பாக நிா்வகிக்க உதவும் நோக்கில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், 2028 மாா்ச் வரை செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் தொடா்பான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று தொழில் துறையினா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, ஆவணபூா்வ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய நடைமுறையின்படி, விண்ணப்பதாரா்கள் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கை 10-இல் இருந்து 3-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, சிபிஐசி தெரிவித்துள்ளது. இதேபோல், விண்ணப்பதாரா் அளிக்க வேண்டிய தகவல்களும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நடைமுறை செப்.15 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.