மூன்றாவது உலகப் போர் வந்தால் உலகம் அழிந்துவிடும்
மூன்றாவது உலகப் போர் வந்தால் உலகம் நிச்சயம் அழிந்துவிடும்.
""மூன்றாவது உலகப் போர் வந்தால் உலகம் நிச்சயம் அழிந்துவிடும். இன்னொரு உலக யுத்தத்தை உலகத்தால் தாங்க முடியாது. என் சம்பந்தப்பட்டவரை இரண்டாவது யுத்தம் முடிவடையவில்லை. அது இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது'' என்று மகாத்மா காந்தி, ஒரு அமெரிக்க நிருபரிடம் கூறினார்.
""ராஜீயத்தில் சம்பந்தப்படாமல் சமூக வேலைகள் கூட செய்ய முடியாது என்பதை உணர்ந்தேன். அதனால்தான் அரசியல்துறைக்கு வரவேண்டிய கட்டாயமேற்பட்டுவிட்டது. மூச்சு விடுவோரெல்லாம் வரி கொடுத்தாக வேண்டும்; இதுதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி. இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான கிராமவாசிகள் பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி என்ன தெரிந்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு வரி வசூலிப்பவன், போலீஸ்காரன் இவர்கள் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் சின்னங்களாக இருக்கிறார்கள். ஜனங்கள் நாசமாகிக் கொண்டிருக்கையில் ஒருவர் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது'' என்று மகாத்மா காந்தி அமெரிக்க நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறினார்.
அடுத்த யுத்தத்தை எப்படி தடுப்பது என்ற கேள்விக்கு காந்திஜி பின்வருமாறு பதிலளித்தார்:
உலகம் என்ன செய்தாலும் சரி ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காகக் காத்திராமல் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் செயலில் இறங்குவார்கள். ஒரு மனிதனுடைய லட்சியங்களும், செயல்களும் சர்வ வியாபமாகி பலனும் கொடுக்கும் காலம் வரும். ஒருவன் தான் என்ற எண்ணத்தை மறந்து சேவையே பிரதானமாக நினைத்துக் காரியங்களைச் செய்யும்போது, அம்மாதிரி ஏற்படும்.
மூன்றாவது உலக யுத்தம் வந்தால் அத்துடன் உலகம் அழிந்துவிடும். இன்னொரு உலக யுத்தத்தை உலகம் தாங்க முடியாது. என் சம்பந்தப்பட்டவரை இரண்டாவது யுத்தம் முடிவடையவில்லை; இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.
தினமணி (05-10-1946)