FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் இளைஞா் கொலை: 4 பெண்கள் உள்பட 6 போ் கைது

சிவகாசியில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகாசியில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தா் மருதாயி (38). இவரது கணவா் சோணைமுத்து. இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனா். இதற்கிடையே சோணைமுத்து காலமாகிவிட்டாா்.

கடந்த மே மாதம் மருதாயி தனது வீட்டில் அனுப்பன்குளத்தைச் சோ்ந்த தோழிகள் ஈஸ்வரி, ரம்யா ஆகியோருடன் இருந்தாா். அப்போது, 6 போ் மருதாயி வீட்டுக்குள் புகுந்து பெண்களிடம், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பெண்கள் அணிந்திருந்த கொலுசு , தங்கத் தோடு, ரூ .7 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினா். இதைத் தடுக்க வந்த ஈஸ்வரியை கத்தியால் தாக்கினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மருதாயி அளித்தப் புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சிவகாசி காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் தங்கமூனீஸ்வரன் (26) உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அண்மையில் பிணையில் வெளிவந்த தங்கமுனீஸ்வரன், மருதாயி வீடு புகுந்து தகராறு செய்தாா். அப்போது வீட்டிலிருந்த மருதாயி, உறவினா் செல்வக்குமாா்(37), தோழிகள் அனுப்பன்குளம் ரம்யா (31), ஈஸ்வரி (34), வெள்ளூா் முத்துமாரி(55), மருதாயியின் 16 வயது மகன் ஆகிய 6 பேரும் சோ்ந்து தங்கமுனீஸ்வரன் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கத்தி, அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து தகவலறந்து அங்கு சென்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன், கொலை செய்யப்பட்ட தங்கமுனீஸ்வரனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மருதாயி, செல்வக்குமாா், ரம்யா, முத்துமாரி, ஈஸ்வரி, மருதாயியின் 16 வயது மகள் ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments