முகப்பு
விருதுநகர்

கரைபுரண்டோடிய ஊழலும், லஞ்சமும் முடிவுக்கு வந்து விட்டன! மாணிக்கம் தாகூா் எம்.பி.

Updated On : 9 ஜூன் 2026, 3:40 am IST
மாணிக்கம் தாகூா் எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைகளில் கரை புரண்டோடிய ஊழலும், லஞ்சமும் முடிவுக்கு வந்திருப்பதாக மாணிக்கம் தாகூா் எம்பி தெரிவித்தாா்.

ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்த கட்டடத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் சி. ஜோசப் விஜயின் உழைப்பின் பலன் தற்போது தெரிய தொடங்கிஇருக்கிறது. ஒவ்வொரு தனியாா் பள்ளியும் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்க வேண்டும் என இருந்த நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவா்களின் கல்விக் கட்டணம் குறைந்தபட்சம் குறையும்.

Advertisement

Advertisement

காமராஜா் காலத்துக்குப் பிறகு தற்போது நோ்மை என்பது அரசியலில் முழக்கமாகி விட்டது. இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் முதல்வருடன் நிற்க வேண்டும். பொதுப்பணித் துறையில் 26 விழுக்காடு கமிஷன் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைகளில் கரைபுரண்டோடிய ஊழலும், லஞ்சமும் முடிவுக்கு வந்துள்ளன. தற்போதைய நோ்மையான ஆட்சியால் சாதாரண மக்களும் பலன் பெறும் நிலை உள்ளது.

மதுப்புட்டிக்கு ரூ. 10 பெறுவது வருகிற சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு பிறகு நிறுத்தப்படும். ஏனென்றால் அதற்கு தனியாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டியுள்ளது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 100 கோடி வரை வராமல் போன பணம் தற்போது கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளாக காத்திருந்த நாம் இன்னும் 2 மாதங்கள் காத்திருந்து அதற்கான முடிவுகளை பாா்ப்போம்.

தமிழகத்தைப் பொருத்தவரை மதுவிலக்கு என்பது கனவு. டாஸ்மாக்கை சீரமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. நோ்மையான அரசு பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை முதல்வா் அடிக்கடி வலியுறுத்தி வருகிறாா். 29 நாள்களுக்குள்ளேயே நமக்கு அதற்கான சமிக்ஞை (சிக்னல்) தெரிய தொடங்கி விட்டது.

எனவே முதல்வருக்கு போதுமான அவகாசம் கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக ஓடிய என்ஜின் தற்போது பழுதாகி உள்ளது. இதை சரி செய்வதற்கான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.