ஆடை வனம்
துருக்கி, பல்கேரியா, கனடா நாடுகளில் நகரின் வெளிப்புறங்களில் காணப்படும் மரங்களில் உடைகளை செருகி வைத்திருப்பார்கள்.
துருக்கி, பல்கேரியா, கனடா நாடுகளில் நகரின் வெளிப்புறங்களில் காணப்படும் மரங்களில் உடைகளை செருகி வைத்திருப்பார்கள். அதை 'ஆடை வனம்' என்று அழைக்கிறார்கள்.
குளிரிலிருந்து பாதுகாக்க கனமான ஆடைகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்க, பயன்படுத்தப்பட்ட கோட்டுகள், ஸ்கார்ஃப், தொப்பி, கையுறைகள் போன்ற குளிரைப் போக்கும் ஆடைகளை இவ்வாறு மரத்தில் தொங்கவிடப்படும் வழக்கம் இந்நாடுகளில் உள்ளது.
'தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்' என்ற குறிப்பையும் சிலர் எழுதி வைக்கிறார்கள். எந்த விதிமுறைகளும் இல்லை. படிவம் இல்லை. எந்தச் சான்றும் கேட்கப்பட மாட்டாது.
Advertisement
கடுங்குளிரிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்ள கனமான கம்பளி, கோட் போன்ற உடல் வெப்பம் காக்கும் உடைகள் வாங்க வசதி இல்லாதவர்கள் குளிர்காலங்களில் சிரமப்படுவார்கள். பிறரிடம் போய், 'ஆடை இருந்தால் கொடுங்கள்' என்று கேட்கவும் சுயமரியாதைத் தடுக்கும். இந்தத் தர்மசங்கடங்களைத் தவிர்க்க, தங்களுக்குத் தேவை இல்லாத உடைகளை இந்த மூன்று நாடுகளில் மரங்களில் தொங்க விடுகிறார்கள்.
கனடாவில் மரங்களில் ஆணி அடித்து, தாங்கியில் ஆடையை வைத்துத் தொங்க விடுகிறார்கள். துருக்கி, பல்கேரியா நாடுகளில் மரத்தில் ஆணி அடிப்பது தவறு என்பதனால், மரங்களுக்கு ஆடைகளை அணிவித்துவிடுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 'ஜிப்'பைப் பிரித்து ஆடைகளை எடுத்துக் கொள்ளலாம்.
வீடற்றவர்கள், வறுமையில் உள்ளவர்கள் கண்ணியத்துடனும், வெட்கப்படாமல், தயங்காமல் ஆடைகளை எடுத்துக்கொள்ள இந்த வழக்கம் அமெரிக்காவிலும் பல மேலை நாடுகளிலும் இருக்கிறது. ஏழை மக்கள் குளிரில் நடுங்கி சிரமப்பட வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் இப்படி 'ஆடை வனம்' உருவாகியுள்ளது.