இலக்கியமும் சமூக சேவையும்!
கவிஞர், எழுத்தாளர், 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர், மேடைப் பேச்சாளர், சமூக ஆர்வலர், சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் எனப் பலவற்றிற்குச் சொந்தக்காரர் ரமா ராமநாதன்.
கவிஞர், எழுத்தாளர், 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர், மேடைப் பேச்சாளர், சமூக ஆர்வலர், சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் எனப் பலவற்றிற்குச் சொந்தக்காரர் ரமா ராமநாதன். புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் சமீபத்தில் பாராட்டப்பெற்றார்.
'தொடக்கத்தில் நண்பர்கள், ஆசிரியர்களுடைய பிறந்தநாளுக்குக் கவிதை எழுதினேன். கல்லூரிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் பரிசு பெற்றேன். நாளிதழ், வார இதழ்களில் எழுதலாமே என்று பலர் ஊக்குவித்தனர். இதன் தொடர்ச்சியாக பிரபல நாளிதழ், வார இதழ்களில் கவிதை, கட்டுரை, விமர்சனங்கள் நிறைய எழுதி வெளி வந்துள்ளன.
'குயிலின் நிறம்' என்ற எனது ஹைக்கூ நூல், தமிழ் இலக்கிய உலகில் பரவலாகப் பாராட்டப் பெற்றது. 1996-ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சிறந்த கவிதை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள சில கவிதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சாகித்ய அகாதெமி தொகுத்துள்ள தமிழ் ஹைக்கூ கவிதையில் எனது 10 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் இரா.மோகன் தொகுத்துள்ள நூலிலும் எனது கவிதைகள் இடம்பிடித்துள்ளன.
1000 மரக்கன்றுகளை கிராமப்புறம், நகர்ப்புறங்களில் சில அமைப்புகளோடு சேர்ந்து நட்டு வைத்தேன். அது இன்றைக்கு அழகு தரும் சோலையாகக் காட்சியளிக்கின்றன. சில மரங்கள் மட்டும் கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் சாய்ந்தது. பெண்களின் முன்னேற்றத்திற்காக தையல் இயந்திரங்கள், சிறு தொழில் வளர்ச்சிக்கான உதவிகள், கர்ப்பிணிப் பெண்
களுக்கு சத்துணவுப் பெட்டகம் வழங்குதல், தொழுநோயாளிகளுக்குத் தேவையான உடைகள், உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறேன்.'' என்றார்.