பட்டாம்பூச்சிப் பள்ளத்தாக்கு!
மரங்கள், செடிகள், கொடிகள் இருக்கும் இடங்களில் பறந்தபடி நடமாடும் பட்டாம்பூச்சி பலவண்ணங்களில் அழகாகத் தோன்றும்.
மரங்கள், செடிகள், கொடிகள் இருக்கும் இடங்களில் பறந்தபடி நடமாடும் பட்டாம்பூச்சி பலவண்ணங்களில் அழகாகத் தோன்றும். தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் இந்தப் பட்டாம் பூச்சிகள் மலைப்பிரதேசங்கள், பள்ளத்தாக்குகளில் பல்லுயிர்ப் பெருக்கங்களால் நிறைந்திருக்கும்.
நாட்டில் பல இடங்களில் பட்டாம் பூச்சிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவாவில் பலோலம், அகோண்டா கடற்கரைகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்கானது 'பட்டாம்பூச்சிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது. இது கோவாவின் மறைக்கப்பட்ட ரத்தினம்தான்.
இந்தக் கடற்கரையை 'தேன்நிலவு கடற்கரை' என்றும் அழைப்பர். இந்த அமைப்பே பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட சிறிய குடாவில் உள்ளது. தரை வழியாகச் சென்றால் இதனை எளிதில் அடையலாம். காலையில் படகுச் சவாரி போனால், அதிர்ஷ்டம் இருந்தால் டால்பின்களைக் கண்டுகளிக்கலாம்.
Advertisement
அடர்ந்த வனத்தின் வழியே நடைப்பயணம் மேற்கொண்டால், மரங்களால் ஈர்க்கப்படும் பலவண்ணப் பட்டாம்பூச்சிகளைக் கண்டுகளிக்கலாம். மலை உச்சிப் பூக்களின் மீது பறக்கும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான பட்டாம் பூச்சிகளைக் காணலாம்.
அவை அழகோ அழகு. இங்குக் கடற்கரை நீர் தாழ் நிலையில் இருக்கும். இந்தச் சூழலில் இங்கு நண்டுகள், தங்கமீன்கள், நட்சத்திர மீன்கள், செம்மீன்கள், கடல்முள்ளெலிகள், ஆமைகள் போன்ற செழிப்பான நீர்வாழ் உயிரினங்களைக் காண சிறந்த இடம். இங்கு சூரிய அஸ்தமனம் தனிச் சிறப்பு. ஆனால், மாலை நேரத்துக்குள் திரும்பிவிடுவது நல்லது.