வெகுமதி
வங்காளத்தின் மிகப்பெரிய கல்விமான்களில் ஒருவர், ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
வங்காளத்தின் மிகப்பெரிய கல்விமான்களில் ஒருவர், ஈஸ்வர சந்திர வித்யாசாகர். ஒரு சமயம் அவர் நாடகம் பார்க்கச் சென்றிருந்தார். அந்த நாடகத்தில் வரும் கதாநாயகன், கதாநாயகியை மிகவும் கொடுமைப்படுத்துகிறான். ஒருநாள் இரவு கதாநாயகன், கதாநாயகியை அடித்து துன்புறுத்துகிறான்.
அந்தக் காட்சியைப் பார்த்து சகிக்க முடியாத வித்யாசாகர், மேடையில் ஏறி காலில் கிடந்த செருப்பைக் கழற்றி, கதாநாயகனை விளாசித் தள்ளிவிட்டார். வித்யாசாகரின் இந்தச் செயலைப் பார்த்து அனைவரும் திகைத்துப்போனார்கள்.
ஆனால், கதாநாயகனாக நடித்தவர் மட்டும் வித்யாசாகரின் செருப்பை மார்போடு அணைத்துக் கொண்டு, அவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். பின்னர் நாடகம் பார்க்க வந்தவர்களைப் பார்த்து சொன்னார்:
"என்னுடைய நடிப்புக்கு இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய வெகுமதி கிடைத்ததில்லை. வித்யாசாகர் என்ற பெரிய மேதை என்னுடைய நடிப்பில் இந்த அளவுக்கு கவரப்பட்டிருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவருடைய செருப்பு எனக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசாகக் கருதுகிறேன். இதை என்னுடைய வாழ்நாள் முழுவதும் வைத்துப் போற்றுவேன்.''
அவமானத்தால் தலைகவிழ்ந்த வித்யாசாகர், "நாடகம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நாடகம் என்பதையும் மறந்து அவசரத்தில் செயல்பட்டுவிட்டேன்'' என்றார்.