முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மாற்றம் ஏற்படுத்திய மனிதர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சிறுகிராமம், பிப்லாந்திரி.

Updated On : 14 பிப்ரவரி, 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:01 AM

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சிறுகிராமம், பிப்லாந்திரி. அந்த கிராமத்தை பொறுத்தவரைக்கும், பெண் குழந்தை பிறந்தால், அவர்களுக்கு கெட்ட செய்தி.காரணம், அவர்களது சமுதாயத்தில் இருக்கும் வரதட்சணை
பழக்கம்தான்.

அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், சமூக ஆர்வலருமான ஷியாம் சுந்தர் பலிவால், தன் கிராமத்தின் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து, அரசாங்க உதவியுடன் நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில், பல தடைகள் ஏற்பட்டன. ஊர் மக்கள் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. அந்த கிராமத்திற்கு, அரசாங்கம் பல நல திட்ட உதவிகளை அளித்தது, ஷியாமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Advertisement

இதன் காரணமாக, மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக திட்டத்திற்கு ஒத்துழைக்க ஆரம்பித்தனர்.

அப்படி என்ன திட்டம் ?

பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் திட்டம். அதாவது, ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், பெற்றோர்கள், உறவினர்கள் 111 மரக்கன்றுகளை நடவேண்டும். நட்ட மரக்கன்றுகளின் பராமரிப்புகளை, கிராம பஞ்சாயத்து மற்றும் தன்னார்வல குழுக்கள் கவனித்து கொள்ளும்.

பிறந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,பெற்றோர்களிடம் பத்தாயிரம் ரூபாயும், கிராம பஞ்சாயத்து மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கூடுதலாக 21,000 ரூபாய், ஆக மொத்தம் 31,000 ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

அதே போன்று, பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்த, பத்திரத்தில் பெற்றோர்களிடம் திட்ட அம்சங்கள் எழுதப்பட்டு, கையொப்பம் வாங்கப்படும்.

பத்திரத்தில் உள்ள அம்சங்கள் :

எங்கள் குடும்பத்தில் உள்ள யாரும் பெண் சிசுக் கொலை செய்ய மாட்டோம். நடப்பட்ட 111 மரங்களும், எங்கள் மகளுக்கு, சமமான அக்கறையுடன் வளர்க்கப்படுவார்கள். எங்கள் மகளுக்கு கல்வி கட்டாயமாக கற்பிக்கப்படும். எங்கள் மகளுக்கு, குழந்தை திருமணம், செய்ய மாட்டோம். டெபாசிட்டில் உள்ள பணம், எங்கள் மகளின் திருமணத்திற்காகவே செலவிடப்படும். நாங்கள் நட்ட மரங்கள் அனைத்தும் இந்த கிராமத்தின் சொத்து.

18 வருடங்கள் கழித்து, பெண் குழந்தை வளர்ந்ததை போல், நட்ட மரக்கன்றுகளும் பெரிய மரமாக வளர்ந்திருக்கும்.

18 வருடங்களின், டெபாசிட்டில் உள்ள பணமும் சில லட்சங்களாக பெருகியிருக்கும்.இந்த பணம் கண்டிப்பாக திருமணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். அதே போன்று, ஒரு மரத்தினால் வருடத்திற்கு 5000 ரூபாய் வருமானம் கிடைத்தது என்றாலும், 18 வருடங்களில் கிட்டத்தட்ட, ஒரு மரத்துக்கு, 1 லட்ச ரூபாய் கிடைக்கும்.

அப்போது ,வளர்க்கப்பட்ட 111 மரங்களால், 18 வருடங்களில் கிட்ட தட்ட 1 கோடியே 11 லட்சம் ரூபாய்.

இது போக,சுத்தமான சுவாச காற்று,சுற்றுசூழல் பாதுகாக்கப்பட்டு மற்றும் மண் வளமும் மேம்படும். மரங்களின் மூலம், பிப்லாந்திரி கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பும் பெருகியது.

இவை அனைத்தும் ஒரு பெண் குழந்தை பிறந்ததினால் உண்டான பலன். கல்வி பெற்று அவளும் பலன் அடைந்தாள்; கிராமமும் பலன் அடைந்தது கடந்த ஆண்டு நடந்த கணக்கீடு படி,பிப்லாந்திரி கிராமத்தில் 810 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதாவது ,89 லட்சத்து 910 மரங்கள் பராமரிக்கபடுகிறது. ஒரு பெண் பிறந்ததினால் உண்டான பலன்களை கண்டோம், 810 பெண்கள் என்றால் பெண்களும்,கிராமமும் அடைந்த பலன்களை நினைத்து பாருங்கள். ஷியாம், இறந்து போனமகளின் நினைவாக இந்த திட்டத்திற்கு கிரண் நிதி யோஜனா என பெயரிட்டார். ஷியாமின் இந்த திட்டத்தை அறிந்த பல கிராமங்கள்,இதே திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இந்த திட்டம் இவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது.

இந்த கிராமத்தை பற்றியும் இந்தத் திட்டத்தைப் பற்றியும்,டென்மார்க் மற்றும் ராஜஸ்தான் பள்ளிப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமத்தின் நுழைவாயிலில், ஒரு பெரும்பலகையில், கடந்த ஆண்டு பிறந்த பெண் குழந்தைகளின் பெயர்கள் குறிப்பிட்டிருக்கும்.

ஷியாமின் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட ராஜஸ்தான் அரசாங்கம், 2016- ஆம் ஆண்டு, ஒரு திட்டத்தை அறிவித்தது.

அதாவது, பெண் குழந்தை பிறந்தவுடன், அரசாங்கம், அந்த குடும்பத்திற்கு 2500 ரூபாய் அளிக்கும்.பெண் குழந்தையின் முதல் பிறந்த நாளன்று, மேலும் 2500 ரூபாய் அளிக்கும்.இந்த 5000 ரூபாய், அவள் 5-ஆம் வகுப்பு கடந்தவுடன் இரட்டிப்பாகும், 8-ஆம் வகுப்பு கடந்தவுடன் மேலும் இரட்டிப்பாகும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன், 35,000 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் 50,000 ரூபாய் கிடைக்கும்.

இந்த கிராமத்தை மையமாக வைத்து "பிப்லாந்திரி' எனும் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படமும் வந்தது.

ஒரு மனிதனால், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரமுடியும் என்பதற்கு இவரே ஒரு சான்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.