எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும்போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும்.
சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகி விட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்லிடப்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன.
ஆனால், அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது. பேச்சில் ஈர்க்கிறார் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா. பிழை, தூவல் படங்களின் மூலம் அறிமுகமானவர். இப்போது எக்ஸ்ட்ரீம் படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
இணையம், செல்போன்கள் ஆழமாக வேறுரூன்றி விட்டதை விமர்சிக்கும் படமா....
அப்படித்தான் இருக்கும். இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம். எனக்கென எந்த இமேஜூம் இல்லை. அதனால் எந்த திசையிலும் நான் பயணிக்கலாம். அதனால்தான் ஒரு கை பார்க்கலாம் என்று வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன.
இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல், தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியா தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்கு பின்னால் எத்தனை ரணம் இருக்கும்.
நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள் நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு பார்வையும் இருக்கிறது.
காதலை அர்த்தப்படுத்துகிற தலைமுறை பிள்ளைகள் மாறியிருக்கிற காலம் இது...
உள்ளங்கை உணர்ந்த கண்ணீர்!
எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். ஆனாலும், இன்னும் உண்மையான அன்புக்கு கிடையாய் கிடப்பவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் என்கிற அற்பமான , அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது.
படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இது கூட சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால் இது கூட சென்டிமென்ட்தான் இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்...
இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போக கூடாது என நினைக்கிறார்கள்.
இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித வாழ்க்கையின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காமமும் அப்படித்தான். காதலை போல் காமமும் பேசப்படுகிற விஷயம்.
எப்படி இருக்கும் படத்தின் திரை பாணி வடிவம்...
இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக் கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை. எல்லாம் எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள். நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், படித்த பத்திரிகை செய்தி, கண் கூடாக பார்த்த அம்சங்கள்... இது. உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான். ஒரு சினிமா இரண்டரை மணி நேரம்தான்.
ஆனா, ஒவ்வொரு வாழ்க்கையும் 24 மணி நேரம். வாழ்க்கைதான் நாம் யோசிக்க முடியாத சினிமா என்பது டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை. நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வொர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்கு தட்டுப்படாத பிரியங்களின் , கரிசனங்களின் குவியல்தான் இந்த படம். எங்கோ கோடி பேரில் , ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை.
இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்க போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் எந்த பெண்களும் சிக்கிக் கொள்ள கொள்ளலாம். அதற்கான விழிப்புணர்வு இது.
சீரியல் பிரபலம் ரக்ஷிதாவை அழைத்து வந்திருக்கீங்க போல...
சீரியல் மூலமாக எல்லோருக்கும் அறிமுகமானவர் ரக்ஷிதா. சினிமாவில் லேபிளுக்குதான் காசு என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அந்த லேபிளை உருவாக்க வேண்டுமே... அதற்காகத்தான் இந்த போராட்டம். ஒரு வகையில் ரக்ஷிதா பிரபலமான லேபிள்.
அதனால்தான் இந்தக் கதைக்கு அவரை அழைத்து வந்தேன். மற்றபடி எல்லோரும் ஒரு விதத்தில் புதுமுகங்கள்தான். அவர்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு முதல் தகுதியை உண்டாக்கி தரும் விதமாக இந்தப் படம் இருக்கும். எல்லோருக்கும் வாய்ப்பு தந்து தூக்கி விட்ட தயாரிப்பாளருக்கு ஆயிரம் நன்றிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.