'ரெவ்ஜென் ஃபிலிம் பேக்டரி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ரெட் லேபிள்'. திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை கே.ஆர். வினோத் இயக்கியுள்ளார். கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். லெனின், அஸ்மின், ஆர். வி. உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசும்போது, 'முதலில் இந்தத் தலைப்பை நான் பாராட்டுகிறேன்.
நல்ல அழகான தலைப்பு. தயாரிப்பாளர் லெனினையும் பாராட்டுகிறேன். நான் கோயம்புத்தூர்காரனாக இருந்தாலும், எந்த கோயம்புத்தூர்க்காரரும் எனக்கு வாய்ப்புக் கொடுத்ததில்லை. இவர் எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
என்னிடம் வந்ததுமே, 'படம் தயாரிக்கிறாயா? யோசனை செய், எச்சரிக்கையாக இரு!' என்றுதான் சொன்னேன். முதலில் அவர் நடித்த 'உன் கூடவே' என்கிற பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு கொடுத்த உந்துதலில் தயாரிப்பாளராக வந்துவிட்டார். இப்போது கதாநாயகன் ஆகிவிட்டார். ஒரே மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே இந்தப் படப்பிடிப்பு இனிமையாக இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த கதைகள் வருவதில்லை. 'பாசமலர்', 'குடும்பம் ஒரு கதம்பம்' போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்துவிட்டு வந்தால், படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள். படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது. இப்போது அப்படி இல்லை.
அனைவரும் பார்க்கும்படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். அதை புதியவர்கள் முறியடிக்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.