மனித உணர்வுகளின் பதிவு
அண்மையில் வெளிவந்த 'லாரா' திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால் பாராட்டப்பட்டது.
அண்மையில் வெளிவந்த 'லாரா' திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால் பாராட்டப்பட்டது. பட்ஜெட் படங்களில் எதிர்பாராத வகையில் ஆச்சரியம் அளித்த படம் என்று பத்திரிகைகள் எழுதின.
வணிக ரீதியாகவும் அந்தப் படம், வெற்றி பெற்றது. அதே தயாரிப்பாளர் கார்த்திகேசன் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். 'அறுவடை' என்கிற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை அவர் இயக்குவதுடன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஏற்கெனவே 'லாரா' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் கோவையில் நடைபெற்றவுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.
கோவை, கோபிசெட்டிப்பாளையம், பவானி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜூம், முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணனும் நடிக்கிறார்கள்.
மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆனந்த் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ரகு ஸ்ரவண் குமார் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பு கே .கே . விக்னேஷ், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி, நடனம் - ஏ. எம். ஜே. முருகன் என்று புதியபடக் குழு உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் கிராமத்து மண்ணையும், மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும், பல விதப்பட்ட மனித உணர்வுகளையும் பதிவு செய்யும் படமாக உருவாகி வருகிறது 'அறுவடை'.