சங்கராபரணி ஆற்றங்கரையில் அதிசய கல்மரங்கள்
தமிழரின் பெருமை கூறும் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற பகுதிகள் 2300 முதல் 2600 ஆம் ஆண்டுகள் வரை பழைமையானவை.
பனையபுரம் அதியமான்
தமிழரின் பெருமை கூறும் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற பகுதிகள் 2300 முதல் 2600 ஆம் ஆண்டுகள் வரை பழைமையானவை. ஆனால், அதற்கும் முற்பட்ட காலத்தைய கல்மரங்களும் இங்குள்ளன.
தமிழ்நாடு புதுச்சேரி எல்லைக் கிராமமான திருவக்கரையில் ஓடும் சங்கராபரணி ஆற்றங்கரையில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் கல்
Advertisement
மரப் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள கல்மரங்கள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. மத்திய அரசின் புவியியல் ஆய்வுத் துறை இதை வேலியிட்டு, பராமரித்து வருகின்றது.
உள்ளே நுழைந்ததும், நின்ற நிலையிலான மூன்று கல் மரங்கள் நம்மை வரவேற்கின்றன. அதில் அந்த மரங்கள் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. அடுத்து இடதுபுறம் கிரானைட் கல்லில் கல்மரப் பூங்கா பற்றிய குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்மரப் பூங்காவை எளிதாகச் சுற்றிப் பார்க்க நேர்த்தியான சிமென்ட் பாதை அமைந்துள்ளது. இருபுறமும் பெரிய பெரிய மரங்கள், துண்டு துண்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை மரங்கள்தான் என்றாலும், கோடிக்கணக்கான ஆண்டுகள் வேதியல் மாற்றத்தால் கல் மரங்களாகி, படிவுப்பாறைகளாகக் காட்சிதருகின்றன.
இவை கடலூர் மணற் தொகுப்பைச் சேர்ந்தவை. சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்த காடுகளில் இருந்து ஆற்றில் அடித்துக் கொண்டுவரப்பட்ட மரங்கள் மணல், கூழாங்கற்களோடு சேர்ந்து இங்கிருந்த நீர் நிலைகளில் படிந்தன.
காலப்போக்கில் மேன்மேலும் மணற்படிவுகள் அடுக்கடுக்காகப் படிந்ததால் ஏற்பட்ட வெப்ப அழுத்த மாற்றங்களால், இவை மரத்தின் தன்மையை இழந்து, சிலிக்காவை எடுத்துக்கொண்டு கல் மரங்களாக மாறின. இங்கு சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கல் மரங்கள் உள்ளன. இவை இப்போது உள்ள இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் கல் மரங்களாக மாறி இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.
இவற்றில் சில திறந்த விதை தாவர இனத்தையும், சில மூடிய விதை தாவர இனத்தையும் சேர்ந்தவையாகும். இக்காலத்தில் உள்ள புன்னை, காட்டாஞ்சி குடும்பங்களைச் சேர்ந்த மரங்களும், புளிய மரத்தைப் போன்றவைகளும் இங்கே கல் மரங்களாக உள்ளன. உலகில் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் இந்த அரிய வகை கல் மரங்கள் பூமியின் வரலாற்றை உரைக்கும் வரலாற்றுச் சான்றுகளாகும்.
இந்த இடத்தை 1781ஆம் ஆண்டில் ஐரோப்பிய புவியியல் அறிஞர் சொன்னேர்ட் என்பவர் கண்டறிந்தார். நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரிய வகை தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களைப் பராமரித்து வரும் இந்திய புவியியல் ஆய்வுத்துறை 1957ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கல் மரங்களை திறந்தவெளி அருங்காட்சியமாகப் போற்றி பாதுகாத்து வருகின்றது. பூங்காவைப் பார்த்து ரசித்த பின்பு மிகப்பெரிய ஆலமரம், அதன் அருகில் பழைமையான ஐயனார் கோயில், அமர்ந்து ஓய்வெடுக்க விசாலமான திண்ணைகள் இருக்கின்றன.
லைலா ஓடை, கள்ளன்குகை
கல்மரங்களுடன் இங்கே மேலும் இரண்டு அதிசயங்கள் உள்ளன. ஒன்று, திருவக்கரையின் மின்வாரிய நிலையத்தின் அருகில் உள்ள 'சாலு ஓடை என்று அழைக்கப்படும் லைலா ஓடை. மழைநீர் அதிக அழுத்தத்தில் மண்ணையும் பாறைகளையும் அரித்து, அதை எழிலான மணற்படிவப் பாறைகளைக் குகையாக்கி தண்ணீர் வெளியே வருகிறது. இந்த அமைப்பு ஏதோ வெளிநாட்டுக்கு வந்த உணர்வை ஏற்படுத்துகிறது. இதுபோல திருவக்கரை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் தெரு வழியே சென்று பார்க்கக்
கூடிய கள்ளன் குகை, அதன் மீதுள்ள மணற்படிவங்கள் மிகவும் தொன்மையானவை.
உலகில் கல்மரங்கள்
கல்மரங்கள் பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் பகுதிகளிலும் உள்ளன என்றாலும், திருவக்கரை அளவுக்கு பிரம்மாண்டம் காணப்படவில்லை. அதுபோல ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களிலும், அமெரிக்கா, கிரீஸ், அர்ஜென்டினா, நியூசிலாந்து, எகிப்து, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் கல் மரங்கள் காணப்படுகின்றன. இதில் அமெரிக்காவில் உள்ளது 20 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது.