மைசூருக்கும் பாண்டவபுராவுக்கும் இடையே உள்ள ஹரலஹள்ளி கிராமத்தில், எழுபத்தைந்து வயதான அங்கே கௌடா எனும் தனி நபர் நடத்தும் 'ஞான ஆலயம்' என்று அழைக்கப்படும் பிரமாண்ட நூலகத்தில் சுமார் 20 லட்சம் நூல்கள் உள்ளன. உலகின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றான இங்கு நூல்களைப் பயன்படுத்த யாரிடமும் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
இவர் தனது இருபதாம் வயதில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றியபோது, நூல்களைச்சேகரிக்கத் தொடங்கினார். கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற வேலையை விட்டுவிட்டு, சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தார். முப்பது ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த அவர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை நூல்கள் வாங்குவதற்குச் செலவு செய்தார். இதற்காக, மைசூரில் உள்ள தனது சொத்தையும்கூட விற்றார். இதற்காக அங்கே கௌடாவுக்கு அவரது குடும்பத்தினர் ஆதரவாக இருக்கின்றனர்.
அங்கே கௌடா கூறியது:
'நான் கல்லூரியில் படிக்கும்போது, புத்தகங்கள் விலைக்கு வாங்க முடியாத அளவுக்கு அதிக விலை. எனவே, மாணவர்கள் பயன்படுத்த ஒரு நூலகத்தை உருவாக்க நினைத்தேன். ஆரம்பத்தில் ராமகிருஷ்ணா ஆசிரமத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். எனது பேராசிரியர் அனந்தராமுவின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளே எனது ஆர்வத்தை ஒரு வெறியாக மாற்றியது.
நான் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தாலும், ஊருக்கு வெளியே செல்லும்போதெல்லாம் வீட்டுக்கு நூல்களை வாங்கிக் கொண்டு வந்தேன். இப்படி சிறு துளி பெருவெள்ளமாக மாறி, மிகப் பெரிய நூலகமாக மாற, வீட்டில் நூல்கள் வைக்க இடம் இல்லாமல் போய்விட்டது. வீட்டில் இடம் இல்லாததால் நாங்கள் சமையல் அறையில்தான் இரவுகளில் தூங்கினோம்.
இதையறிந்த தொழிலதிபர் ஸ்ரீ ஹரி கோடேவும் நூல்களைப் பாதுகாக்க 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரிய கட்டடம் கட்டித் தந்தார். நூலகத்துக்கு உறுப்பினர் கட்டணம் அல்லது சேர்க்கைக் கட்டணம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் நூலகத்துக்கு வந்து, நூல்களை வாசிக்கலாம். ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஐ.ஏ.எஸ். தேர்வர்கள் நிரந்தர வருகையாளர்கள். பல நீதிபதிகள் வருகை தந்து சிறப்பித்துள்ளனர். சுற்றுலாப் பயணியரும் வருகிறார்கள்.
நூலகத்தில் சுமார் 20 லட்சம் நூல்கள் உள்ளன. 5 லட்சம் வெளிநாட்டு நூல்களும் அடங்கும். பல்வேறு மொழிகளில் சுமார் 5,000 மொழி அகராதிகளும் இடம் பெற்றுள்ளன. 22 இந்திய மொழிகளில் வெளியாகியிருக்கும் நூல்கள் வாசிக்கக் கிடைக்கும். சிறுவர் புத்தகங்கள், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், பயணம், புராணங்கள், தபால் தலைகள், திரைப்பட சுவரொட்டிகள், நாணயங்கள், செய்தித்தாள்களும் எனது சேகரிப்பில் அடங்கும்.
எனது சேவைக்காக, 'பத்மஸ்ரீ' விருதை மத்திய அரசு வழங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
'அமெரிக்காவின் இந்தியானாவைச் சேர்ந்த ஜான் கியூ. பென்ஹாம் என்பவர் உலகின் மிகப்பெரிய தனியார் நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்' என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. எனது நூலகத்தில் எவ்வளவு நூல்கள் உள்ளன என்று யாரும் இதுவரை துல்லியமாகக் கணக்கிடாததால், எனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவில்லை. நூலகத்தில் இருக்கும் நூல்களை இயற்கைச் சீரழிவிலிருந்து பாதுகாக்க எண்ம மயமாக்கலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்' என்கிறார் அங்கே கவுடா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.