ஞாயிறு கொண்டாட்டம்

மின் ஆவணங்கள்...

'கிரீன் ஸ்டோன் மென்பொருள் மூலம் எண்ம நூலகங்கள், வினாத்தாள்கள், மின் நூல்கள், புகைப்படங்கள், வெளியீடுகள், மின் இதழ்கள், மின் ஆய்வேடுகள், பிற ஆய்வு உதவு நூல்கள் கிட்டத்தட்ட 12 ஆயிரத்துக்கும்...

தினமணி செய்திச் சேவை

பொ.ஜெயச்சந்திரன்

'கிரீன் ஸ்டோன் மென்பொருள் மூலம் எண்ம நூலகங்கள், வினாத்தாள்கள், மின் நூல்கள், புகைப்படங்கள், வெளியீடுகள், மின் இதழ்கள், மின் ஆய்வேடுகள், பிற ஆய்வு உதவு நூல்கள் கிட்டத்தட்ட 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச மின் ஆவணங்களைப் பார்வையிட உதவும் வகையில் இணைப்புச் சொடுக்கிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். புதிய மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வகுப்புகளை உருவாக்கியுள்ளேன். நூலக

வியலில் ஆராய்ச்சியை வளர்க்கும் வகையில், நூலகம், தகவல் அறிவியலில் ஆராய்ச்சிக் குழுமத்தை ஏற்படுத்தியுள்ளேன்'' என்கிறார் முனைவர் சு.சூரியநாராயணன்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரியில் 34ஆண்டுகள் பணியாற்றி, மதுரைக் கல்லூரி முன்னாள் முதல்வராக (சுயநிதி) இருந்த சூரியநாராயணன், அம்பாசமுத்திரத்தில் வசித்து வருகிறார்.

பதிப்பாசிரியர், ஆய்வுக் கட்டுரையாளர், பேச்சாளர், சமூகச் சேவையாளர்... என்று பன்முகத் தன்மை கொண்ட இவர், பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக் கல்வியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர். தமிழ்நாடு நூலகச் சங்கத் தலைவராகப் பதவி வகித்துள்ள இவர், இந்திய நூலகச் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினராக உள்ளார்.

ஆய்வு மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த தகவல்களையும், ஆலோசனைகளையும் நேரடியாகவும், இணைய வழியாகவும் அளித்து வரும் அவரிடம் பேசியபோது:

'ஒருங்கிணைக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள இலத்தூர் கிராமத்தில் சூ.சுப்பிரமணியன்- கோமதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தேன். அப்பா, சித்தப்பா இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

பள்ளிப் படிப்பை இலத்தூர் அரசு ஆரம்பப்பள்ளியிலும், பின்னர் லட்சுமி ஹரிஹர உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் பி.யூ.சி.யும் படித்தேன்.

பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் பட்டப் படிப்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை நூலக அறிவியல், எம்.ஏ. (காந்தியச் சிந்தனை), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி. கணிதம், முனைவர் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைநூலகவியல் பட்டங்களைப் பெற்றேன்.

பள்ளியில் படித்தபோதே பேச்சாளரானேன். 'பாரியின் பறி' என்னும் நாடகத்தின் மூலம் ஒளவையாராக மாணவர்களிடம் அடையாளம் காட்டப்பட்டேன். தமிழாசிரியர்கள் செல்லையா பிள்ளை, பிச்சாண்டி ஆகியோர் எனது தமிழ் ஆர்வத்தையும், ஹிந்தி ஆசிரியர் பொன்னம்மாள் நடிப்பாற்றலையும் வளர்த்தனர். சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி நாள்களில் சப்பரம் செய்து, இரவு முழுவதும் நடத்தும் நாடகங்களை முக்கியப் பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர்.

கல்விப்பணியில்...:

65 ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். 6 நூல்களுக்கு பதிப்பாசிரியராகவும், 14 ஆராய்ச்சி அமர்வுகளுக்கு பங்கேற்பாளராகவும் இருந்துள்ளேன்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரண்டு தொகுப்புகள் எழுதியிருக்கிறேன். நூலக வளர்ச்சிக்காக, 'வாய்ஸ் ஆஃப் டாக்டர் சூரியநாராயணன்' என்னும் வலைப்பூவை உருவாக்கினேன். மதுரைக் கல்லூரியின் கம்பன் கழகத் தலைவரும், கல்லூரி வாரியத் தலைவருமான சங்கரசீதாராமனின் வேண்டுகோளையேற்று, சுயநிதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 20 பேர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 பேர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருவர் என ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை பெறவும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரா விஸ்வ மஹாவித்யாலயா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் 13 பேர் முனைவர் பட்டங்கள் பெறவும் உறுதுணையாக இருந்துள்ளேன்.

'கேண்டில்' பருவ இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். குன்றக்குடி அடிகளாருடன் இலக்கியக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். 1980-ஆம் ஆண்டில் சிறந்த நூலகப் பயனாளர் விருதும், பொள்ளாச்சியில் நடைபெற்ற சாலிஸ் கூட்டமைப்பு மாநாட்டில் பொள்ளாச்சி மகாலிங்கத்திடம் 'சிறந்த நூலகர் விருது'ம் பெற்றேன்.

மறக்க முடியாத அனுபவங்கள்:

பி.யூ.சி. படிக்கும்போது, வங்கதேசம் உருவானது. அப்போது நடைபெற்ற விடுதியின் ஆண்டு விழாவில் சத்ரபதி சிவாஜியாக பாரதியாரின் கவிதை வரிகளைப் பேசி நடித்தேன்.

திருநெல்வேலியில் அருணகிரி விடுதியில் திருமுருக கிருபானந்த வாரியார் தங்கியிருந்தபோது, அவரிடம் என்னை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.பெருமாள்சாமி அறிமுகம் செய்து வைத்தார். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனது இல்லத்துக்கு வருகை தந்து ஆசி வழங்கியது பெரும் பேறு.

மகாகவி பாரதியாரின் மைத்துனி சுவாமினி சொர்ணம்பாளுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க உதவிகளைச் செய்ததோடு, அவரை பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் மேடையேற்றி பாரதியாரின் பாடல்களைப் பாட வைத்தேன்.

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்துக்கு வருகை தந்த இல.கணேசனிடம் பட்டம்மாள் என்பவர் என்னை அறிமுகம் செய்து வைக்க, அவரிடம் நீண்ட நேரம் உரையாடினேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நூலகவியல் தேசிய கருத்தரங்கின் நிறைவு விழாவுக்கு வருகை தந்த 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் அவர்களின் பாராட்டும் பெற்றேன்'' என்கிறார் முனைவர் சு.சூரியநாராயணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரம்ம வர்ஷினி

வரைந்து பார்!

சதகுப்பை ரசம்

ஓடி... ஓடி...

எல்லோரும் புத்தகம் எழுத வேண்டும்

SCROLL FOR NEXT