முழு நீள காமெடி
பிரஜின் - புகழ் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
பிரஜின் - புகழ் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த காமெடி படத்தை யோகேஸ்வரன் மைனர் எழுதி இயக்குகிறார். ஏ.ஆர்.கே. புரொடக் ஷன்ஸ் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம், வினோத் பெருமாள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜனனி நாயகியாக நடிக்கிறார்.விக்ரம் விஜய், ரவி
மரியா, மைம்கோபி, தீபா, அபிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குநர் யோகேஸ்வரன் மைனர் கூறும்போது, 'இது காமெடி ட்ராமாவாக உருவாகும் படம். பொதுவாகவே ஊருக்கு இரண்டு ஊதாரி இருப்பார்கள். ஆனால், ஒரே வீட்டில் இரண்டு ஊதாரி இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸியமான காமெடி படமாக உருவாக்குகிறோம்.
கடந்த பத்து வருடங்களாக ஒரே அடிதடி, வெட்டு குத்து படங்களாகவே வருகின்றன. தியேட்டருக்கு வரும் சினிமா ரசிகன் அந்த இரண்டு மணிநேரம் தன்னை மறந்து சிரித்து மகிழவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறான். அப்படி சினிமா ரசிகனை ஃபுல் என்டர்டெயின்மென்ட் செய்யும் படமாக இது இருக்கும்'' என்றார்.
இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சுப்ரமணிய சிவா, நாத், சவுந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, சி.வி.குமார், கே. ரமேஷ் பாண்டியன் கலந்துகொண்டனர்.