எண்ம மயமாகும் அரிய நூல்கள்
எண்ம மயம் அதிகரித்துவரும் நிலையில், எழுபதாம் ஆண்டைக் கொண்டாடி வரும் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழானவன்
எண்ம மயம் அதிகரித்துவரும் நிலையில், எழுபதாம் ஆண்டைக் கொண்டாடி வரும் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள நூலகம், புகைப்பட ஆவணக் காப்பகம் ஆகியனவும், இந்தியவியல், சுற்றுச்சூழல், புவியியல், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளும் எண்ம மயமாக்கும் பணியைத் தொடர்ந்துள்ளது.
ஓலைச் சுவடிக் கட்டுகளில் காணக் கிடைக்கும் அரிய தமிழ்- கிரந்த எழுத்துகளில் இருக்கும் சைவ சித்தாந்த நுணுக்கங்களையும், தத்துவக் கருத்துகளையும் எண்ம மயமாக்கியதற்காக, இந்த நிறுவனத்துக்கு உலக நினைவு விருதை யுனெஸ்கோ நிறுவனம் வழங்கி கெளரவித்துள்ளது.
நூலகர் நயினா நாயர்
பிரெஞ்சு அரசின் மத்திய தேசிய ஆராய்ச்சி அறிவியல் நிறுவனத்தின் ரூ.8 லட்சம் நிதியுதவியில், நூலகத்தில் உள்ள அரிய நூல்கள் எண்ம மயமாக்கும் பணி டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதுவரையில் 30 நூல்கள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக முன்னாள் தலைமை நூலகர் அனுரூபா நாயக் முயற்சி செய்திருந்தார்.
புதுச்சேரியில் 1845 -ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட 'கொடுந்தமிழ்' என்ற தமிழ் நூலை லத்தின் மொழியில் எழுதிய கான்ஸ்டென்ட் ஜோசப் பெஸ்கி நூலும் எண்ம மயமாக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் இருக்கும் 1890-இல் வெளியான லட்சுமி சாஸ்திரா, 1896-இல் வெளியான தலைப்பு இல்லாத தெலுங்கு நூல், 1953-இல் சம்ஸ்கிருதத்தில் வெளியான 'தன்வந்திரி தந்தரா சிக்ஷா' என்ற மருத்துவ நூல், 1895-இல் வெளியான 'மருத்துவக் கையேடு' என்ற பிரெஞ்சு நூல் உள்ளிட்ட ஏராளமான நூல்கள் எண்ம மயமாக்கப்பட உள்ளன.
புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்ட பொறியியல் பட்டதாரி என். ரஞ்சித் குமார் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
நூலகர் வி. அன்னபூரணி
நிறுவனத்தின் அனைத்துத் துறைகளின் சார்பில் நடைபெற்ற ஆராய்ச்சிகளும், அவற்றின் பணிகளும், நூலகத்துக்கு 1823 முதல் 1954-ஆம் வரையில் வந்த அனைத்து பருவ இதழ்களும் என 189 இதழ்கள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன. தாவர இலைகள் உள்ளிட்ட பாகங்களைப் பாதுகாக்கும் ஹெர்பேரியம் 27,423 பக்கங்கள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன.
அதில், 1956-ஆம் ஆண்டு முதல் இதுவரையுள்ள எல்லாமும் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன. பூக்களில் உள்ள மகரந்தத்தை ஏன் தேனீக்கள் எடுக்கின்றன. அந்த மகரந்தத்தின் தன்மை, பூக்களின் வடிவம் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் அளிக்கும் வகையில் 150 மாதிரிகள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன. 8400 பனை ஓலைக் கட்டுகள் எண்ம மயமாகியுள்ளன.
இதில்தான் சைவ சிந்தாந்தக் கருத்துகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இதைத் தவிர ஓலைச் சுவடிகளைக் கொடுக்காமல் பிரதிகளாக எடுத்து வந்த இந்த நிறுவனம் 1,144 பக்கங்கள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன.
தென்னிந்திய கோயில்களில் காணப்படும் சிற்பங்கள், கலையம்சம் கொண்ட புகைப்படங்கள், மாதிரிக்கான 113 படங்கள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன. 1.6 லட்சம் படங்களைப் புகைப்பட ஆவணக் காப்பகத் தலைவர் ரமேஷ் குமார் கைவசம் வைத்திருக்கிறார்.
தலைமை நூலகர் ஜி. சரவணன்
ஒரு சில கோயில்களில் காணாமல் போன ஐம்பொன் சிலைகள் இந்த நிறுவனம் அளித்த ஆதாரங்களைக் கொண்டுதான் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. பழங்கால கணக்கு முறைகளில் மாதிரிக்காக 33 நூல்கள், சித்த மருத்துவ நூல்கள் 482 உள்ளிட்டவற்றையும் இந்த நிறுவனம் எண்ம மயமாக்கியுள்ளது. www.ifpindia.org, https//digotacollectios.ifpindia.org ஆகிய இணையதளத்தில் சென்றால் படிக்கலாம்.
நிறுவனத்தில் பணியாற்றிய தி.வை. கோபாலய்யர் எழுதிய 'தேவாரம் ஆய்வுத் துணை', 'மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும்' உள்ளிட்ட தமிழ் நூல்கள், 'புதுச்சேரியின் வரலாறு' உள்ளிட்ட ஆங்கில நூல்கள், சமஸ்கிருதத்தில் 18 ஆகம நூல்கள், பல்வேறு பிரெஞ்சு நூல்களைப் பதிப்பித்து
விற்பனைக்கும் வைத்துள்ளோம். இந்த நிறுவனத்தில் 10 சதவீதம் கழிவுகளுடன் நூல்கள் கிடைக்கும். இந்த ஆண்டு மார்ச் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 17- ஆம் தேதி வரை நடைபெறும் 9-ஆவது சிறப்பு விற்பனையில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் கழிவு அளிக்கப்படும்.