மின்தூக்கியில் ரகசியம்
மின்தூக்கியில் (லிப்ட்) ஏறியவுடன் அது மேலே கிளம்பும்போது, மனிதர்களின் கால்களில் ஓர் அழுத்தம் ஏற்படுகிறது.
ச. நாகராஜன்
மின்தூக்கியில் (லிப்ட்) ஏறியவுடன் அது மேலே கிளம்பும்போது, மனிதர்களின் கால்களில் ஓர் அழுத்தம் ஏற்படுகிறது. அது மேலே செல்ல செல்ல அந்த அழுத்தத்தில் இருந்து விடுபட்டு சற்று லேசாக உணர்வோம். எடை பார்க்கும் இயந்திரத்தை மின்தூக்கியில் வைத்து இதைச் சரிபார்க்கலாம். லிப்ட் மேலே ஏறத் தொடங்கும்போது, உங்கள் எடை சற்று கூடும். மேலே ஏறத் தொடங்கியதும் சரியான நிலைக்கு வரும்.
விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் எடையற்ற நிலையில் இருக்கின்றனர். உண்மையில் அவர்களின் எடை மாறுவதில்லை. பூமிக்கு மேலே 250 மைல் உயரத்தில் உள்ள இன்டர்நேஷனல் ஸ்பேஸ் நிலையத்தில் பூமியின் புவி ஈர்ப்பு விசை 90 சதவீதம் என்ற அளவுக்கு வலிமை உள்ளதாகவே இருக்கிறது. அதனுள் இருக்கும் விண்வெளி வீரர்களுடன் 'ஃப்ரீ பால்' எனப்படும் இயல்வீழ்வினால் பூமியை நோக்கி வருகிறது.
அந்த நிலையம் மணிக்கு 17 ஆயிரம் மைல் வேகத்தில் பக்கவாட்டில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. பூமியின் வளைவால் அது பூமியின் மீது மோதுவதில்லை. அது மோதலைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறது. பூமியில் இருக்கும் நாமோ, தரையானது நம்மை எப்போதும் மேலே தள்ளிக் கொண்டே இருப்பதால் நாம் கீழே விழுவதே இல்லை. விண்வெளி வீரர்களுக்கு புவி ஈர்ப்பு விசையின் செல்வாக்கு உண்டு என்றாலும், விண்கலத்தை மேலே செலுத்தும் அழுத்தம் அங்கு இல்லாததால் அவர்கள் எடையற்ற தன்மையை உணர்கின்றனர்.
இந்த மின்தூக்கி ஒரு உண்மையை உணர்த்துகிறது. உடல் எடை எப்போதும் மாறுவதே இல்லை. புவி ஈர்ப்பு விசையும் பூமிக்கு அருகில் எப்போதுமே மாறுவதில்லை. மாறுவது என்னவென்றால், மின்தூக்கியானது மேலே செல்லும்போது ஏற்படும் அழுத்தம் தான். அதன் காரணமாகத் தான் அப்போது அங்குள்ள எடை பார்க்கும் இயந்திரத்தில் எடையைக் கூட்டுகிறது.
இதையே ஐன்ஸ்டீன் முதலில் உணர்ந்து, தனது 'தியரி ஆஃப் ரிலேடிவிடி' எனும் தத்துவத்தைக் கண்டுபிடிக்க முனைந்தபோது அவர் கண்டார். காலமும் இடமும் கொண்ட வளைவுத் தன்மையினாலும் விரைவுபடுத்தும் வேகத்தினாலும் அவர் இந்த ஒப்புமைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.மின்தூக்கியில் ஏறிப் பயணிப்பதில் இவ்வளவு பெரிய உண்மை அடங்கி இருக்கிறது.