முகப்பு
தமிழ்மணி

பாயைச் சுருட்டடி...

காளமேகப் புலவர் வீட்டுத் திண்ணையில் நண்பர்களோடு அமர்ந்திருந்தார். அப்போது வெளியூர்க்காரர் ஒருவர் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

Updated On : 24 பிப்ரவரி, 2013 at 2:39 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:05 PM

காளமேகப் புலவர் வீட்டுத் திண்ணையில் நண்பர்களோடு அமர்ந்திருந்தார். அப்போது வெளியூர்க்காரர் ஒருவர் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார். புலவர் சிலேடைப் பாடல்களைப் பாடி விளக்கம் கூறியதைக் கேட்ட அவர், புலவரின் புலமையைக் கண்டு வியப்படைந்தார். ""ஐயா, தங்கள் பாடல்கள் தேனும் தினைமாவும் சேர்த்து உண்டதைப்போல சுவையாக உள்ளன. தங்களிடத்து எனது வேண்டுகோள் ஒன்றுண்டு. என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி, ஏகடி அம்பலத்தே என்னும் சொற்கள் பயின்றுவர ஒரு பாடல் தர வேண்டும்'' என்றார்.

÷அதை ஏற்றுக்கொண்ட புலவர், சில வினாடிகள் கண்களை மூடித் தலையை அசைத்தார். அடுத்த நொடியில், ""வெளியூர் நண்பரே, நீங்கள் கேட்ட பாடல் வருகிறது. கேட்டுக் கொள்ளுங்கள்'' என்று கூறி, கீழ்வரும் பாடலைப் பாடினார்.

""தடக்கடலில் பள்ளிகொள்வோம் இதனைநற் சங்கரனார்

Advertisement

அடற்புலிக் குட்டிக்குஅளித் தனராம்அது கேட்டுநெஞ்சில்

நடுக்கம்வந் துற்றதுகை கால்எழாநளி னத்தியென்னை

இடுக்கடிபா யைச்சுருட்டடி ஏகடியம் பலத்தே!''

""ஈற்றடியின் பொருள் மட்டும் புரிகிறது. மற்ற அடிகளில் உள்ள வரலாறு விளங்கவில்லையே'' என்றார் ஒருவர். அதைக் கேட்ட புலவர், ""இதில் புதிர் ஒன்றுமில்லை. ஒரு காலத்தில் உபமன்யு என்பவனுக்கு அவன் தாய் பாலுக்குப் பதிலாக மாவைக் கரைத்துக் கொடுத்து வந்தாள். ஒரு நாள் உபமன்யு காமதேனுவின் பாலைச் சுவைக்க நேர்ந்தது. அது முதற்கொண்டு அதே போன்ற பாலன்னம் வேண்டுமெனத் தாயிடம் அவன் போராடினான். தாய் வழிகாட்ட, உபமன்யு அதற்காகச் சிவனை நோக்கி மகாதவம் செய்தான். சிவபெருமான் எழுந்தருளி, உபமன்யுவின் விருப்பத்தைக் கேட்டு, அவனுக்குப் பாற்கடலை உண்பதற்காகக் கொடுத்தான். இதைக் கேள்விப்பட்ட திருமால், தன் மனைவியை நோக்கி, ""அடியே, பரமன் பாற்கடலை உபமன்யுவிற்குத் தந்துவிட்டான். அவன் பெயரைக் கேட்டாலே எனக்குக் கை கால்கள் எல்லாம் செயலற்றுப் போகின்றன. இனியும் இங்கிருக்க இயலாது. என்னை உன் கக்கத்தில் இடுக்கடி, பாயைச் சுருட்டடி, அரங்கத்திற்கு ஏகடி! என்று உத்திரவிட்டான்'' என்று கூறி, புலிக்குட்டி என்பது உபமன்யுவைக் குறிக்கும் சொல் என்றும் விளக்கினார்.

வெளியூர்க்காரர், தான் தந்த சொற்களுக்கு அருமையான பொருளமைந்த செய்யுள் கிடைத்ததை எண்ணி அளவிலா மகிழ்ச்சியுற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.