முகப்பு
தமிழ்மணி

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் தம் நெஞ்சத்தில் ஏற்றிப் போற்றினார் கம்பர் என்பதற்குக் கிட்கிந்தா காண்டத்திலுள்ள 'அரசியல் படலம்' நல்லதொரு சான்று.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:07 PM
கம்பர்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:05 PM

பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் தம் நெஞ்சத்தில் ஏற்றிப் போற்றினார் கம்பர் என்பதற்குக் கிட்கிந்தா காண்டத்திலுள்ள 'அரசியல் படலம்' நல்லதொரு சான்று. வாலியை வீழ்த்தி சுக்ரீவனுக்கு முடிசூட்டிய பிறகு, அரசனுக்குரிய அறங்களை இராமன் அவனுக்கு எடுத்துரைப்பதாகக் கம்பர் படைத்துள்ளார். இவ்வறவுரை வான்மீகத்தில் இல்லை. இந்தப் பகுதியில் கம்பர் வள்ளுவத்தைப் பல பாடல்களில் எடுத்தாண்டுள்ளார்.

'பகையுடைச் சிந்தையார்க்கும் பயனுறு பண்பினால் நகையுடை முகத்தன் ஆகி நல்கு இன்னுரை நாவால்' (4229) என்கிறது முதலறம்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:06 PM

பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன்

Advertisement

தகைமைக்கண் தங்கிற்று உலகு.

(குறள் 874)

என்ற வள்ளுவரின் வாய்மொழி வெளிப்

படுத்தப்பட்டுள்ளது.

செய்வன செய்தல், யாண்டும்

தீயன சிந்தியாமை;

வைவன வந்தபோதும் வசை

இல, இனிய கூறல்;

மெய்யன வழங்கல், யாவும்

மேவின வெஃகல் இன்மை,

உய்வன ஆக்கித் தம்மோடு

உயர்வன உவந்து செய்வாய் (4231)

என்பது அடுத்த அறம். இந்தப் பாடலில், செய்யவேண்டிய செயல்களைத் திருத்தமாகச் செய்தல்; எப்போதும் தீயனவற்றைச் சிந்தியாதிருத்தல்; பழிச்சொற்கள் வந்தபோதும் பழித்தாரை மீண்டும் பழியாதிருத்தலுடன் அவரிடத்து இனியவற்றையே கூறுதல்; உதவிகேட்டு வந்தவர்க்குத் தன்னிடம் உள்ளவற்றை வழங்குல்; எல்லாவற்றையும்விடச் சிறந்தது பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ளும் ஆசையின்றி இருந்தல். இவற்றுடன் சிறப்புடன் வாழ்வதற்கு ஏற்ற பிற செயல்களைச் செய்தல் வேண்டும். அவை செய்தவர் தம்மையும் உயர்த்தும், உடனுள்ளவர்களையும் உயர்த்தும். அவற்றை விரும்பிச் செய்வாயாக! என்று சொல்லப்பட்டுள்ளது. வள்ளுவத்தின் இனியவை கூறல்,

வெஃகாமை முதலிய அதிகாரங்கள் இப்

பாடலில் இடைமிடைந்து தரப்பட்டுள்ளன.

'பிறர்க்குரிய பொருளை ஒருவன் கவர்ந்து

கொள்ள நினைத்தால் அவனது குடி கெடுவதுடன் குற்றமும் வந்து சேரும்' (171) என்பார் வள்ளுவர். அதனால்தான் யாவற்றையும்விடச் சிறந்த பண்பு 'வெஃகல் இன்மை' என்று கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

வைதாரின் நல்லவர் பொறுப்பவர் (67) என்கிறது நான்மணிக்கடிகை. வைதவரைப் பொறுத்துக்கொள்ளாமல் தாமும் அவரை வைதால் அது, தன் வீட்டைத் தானே தீ மூட்டிக் கொளுத்துவதற்கு ஒப்பாகும் என்கிறது பழமொழி நானூறு (45). இந்நூற் கருத்துகள் கம்பரின் பாடலிலும் படிந்துள்ளன.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் (667) என்று வள்ளுவர் சொல்லியதை,

சிறியர் என்று இகழ்ந்து நோவுசெய்வன செய்யல் (4232) என எடுத்துமொழிந்துள்ளது அடுத்த அரசநீதி.

நாயகன் அல்லன், நம்மை நனி

பயந்து எடுத்து நல்கும்

தாய், என இனிது

பேணித் தாங்குதி தாங்குவாரை;

ஆயது தன்மையேனும், அற

வரம்பு இகவாவண்ணம்

தீயன வந்தபோது

சுடுதியால் தீமையோரை (4234)

இப்பாட்டில், 'தாய் என இனிது தாங்கு' எனும் தொடரில், கோல்நோக்கி வாழும் குடியெல்லாம்; தாய்முலைப் பால்நோக்கி வாழும் குழவிகள் (26) என்ற நான்மணிக்

கடிகையின் கருத்து எதிரொலிக்கிறது.

'தீயது வந்தபோது சுடுதியால் தீமையோரை' என்ற பாடலடியில், குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல், வடுவன்று வேந்தன் தொழில் (549), கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ், களைகட்டு அதனொடு நேர் (550) ஆகிய செங்கோன்மை அதிகாரக் குறட்பாக்கள் பாலொடு தேன்போலக் கலந்துள்ளன.

முன்னேர் என்ற முன்னோர் சென்ற வழியிலே பின்னோரும் சென்று பொன்னேர் பூட்டுதலே சாலச் சிறந்ததாகும் என்று கம்ப மாக்கவி இப்புவிக்கு எடுத்தோதியதைச் சுவைத்து மகிழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.