FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

இறை எளிமையை வியந்த வள்ளலார்!

வள்ளலார் தமது உயர்ந்த கருத்துகளை எல்லாம் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் இவ்வுலகத்தாருக்கு அருளி இருக்கிறார்.

Updated On : 6 மார்ச் 2014, 3:52 pm IST
பகிர்:

வள்ளலார் தமது உயர்ந்த கருத்துகளை எல்லாம் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் இவ்வுலகத்தாருக்கு அருளி இருக்கிறார். அவர் பாடல்களில் உள்ள ஒவ்வொரு வரிகளிலும் ஓராயிரம் பொருள்கள் பொதிந்திருக்கின்றன. அப்படியொரு பொருள் பொதிந்த பாடலைக் காண்போம்.

""கரும்பின் மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்

கண்ணனையீர் கனசபை கருதியசிற் சபைமுன்

Advertisement

Advertisement

துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்

துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை

விரும்புறஆ யிற்றிதுதான் தருணம் இந்தத் தருணம்

விரைந்தருள வேண்டுமென விளம்பி நின்றேன் அடியேன்

பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்

பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே''

முதல் வரியை மேலோட்டமாகப் பார்த்தால், கரும்பின் சுவையைக் கூறுகிறார் என்றே தோன்றும். ஆனால், அதில் ஒரு நுட்பத்தை வைத்துள்ளார். இறைவனை நோக்கி உண்மை தியானம் பயிலும் மகான்களுக்கு சிரசின் உச்சியில் தேவாமிர்த சுவையோடு ஒரு துளி அமுதம் சுரக்கும். அது வயிற்றுப்பசியை அடக்கி ஞானப்பசியை ஏற்படுத்தும் என்பதை மறைமுகமாகக் கூறுகிறார். "கண்ணனையீர்' என்பது அமுதம் சுரந்தபின் அவர்க்கு மூன்றாவது கண்ணாக சிவனே தோன்றுவான் என்கிறார்.

"உடலென்னும் கனக சபையில் விளங்கும் உள்ளமெனும் ஞான சபையின் முன் பக்குவமில்லா காலத்தே பல தீங்கினைப் புரிந்து துரும்பைவிட சிறியேனாகிவிட்ட நான், பின் உணர்ந்து உன் அருளுக்காக துயரத்தோடு நின்றிருந்தேன். "துயரப்படாதே! என்னிடம் வருவதற்கு கால எல்லையுண்டு' என்று என்னைத் தேற்றிய தலைவா! அவ்வெல்லை நான் விரும்பியது போல் இப்பொழுது வந்துவிட்டது. இத்தருணத்தில் விரைந்து அருள வேண்டும்' என்கிறார். மேலும் அவர், "தன் ஐம்புலன்களை அடக்கி, உலகப் பற்றினை அறுத்து ஏழு ஆதார சக்கரங்களை ஒளிரச்செய்து சகஸ்ராகாரச் சக்கரத்தில் சதாசிவ தரிசனம் காணும் காலம் வந்துவிட்டது. இனி சிறிதும் உன்னைப் பிரியமாட்டேன் என்றும், இறைவனை விரைந்து வந்து அருள வேண்டும்' என்றும் வேண்டுகிறார்.

கருவிலே திருவுற்ற வள்ளல் பெருமான் பிழைகள் செய்திருப்பாரா? ஆனால் அவர் கூறுகிறார். என்னே ஒரு தன்னடக்கம்! அவ்வடக்கமே அவரை அருட்பெருஞ் ஜோதியாக - சிவஜோதியாகப் பிரகாசிக்கச் செய்கிறது. "பெற்றவளில் பெரிதே' என்பதில் தாயைவிட உயர்ந்தவன் என்று இறைவனைப் பாராட்டுகிறார். உலகில் தாயன்பு ஈடு இணையற்றது. அதைவிடப் பெரியது இறையன்பு. தானறியா ஓர் அனுபவத்தை பிற உயிர்களிடத்துக் காட்டும் பெருங்கருணை கொண்டவர்தான் சிவபெருமான் என்பதைத்தான் உளம் நெகிழ்ந்து உலகுக்கு உணர்த்தியுள்ளார் வள்ளலார். எவ்வளவு நுணுக்கமான - நுட்பமான செய்தி! வள்ளலாருக்குக் கிடைத்த இந்த இறையனுபவம் நமக்கும் வாய்க்க வேண்டுமானால், வள்ளலார் காட்டிய வழியில் நடந்து ஞானம்பெற முயற்சி செய்வோம் - தியானப் பயிற்சி செய்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments