முகப்பு
வெள்ளிமணி

கணக்கில் வைக்கப்படும் நற்செயல்கள்

பிரதிபலனை எதிர்பாராமல் தெய்வ பக்தியுடன் செய்யப்படும் தான தர்மங்களை இறைவன் போற்றுகிறார். அவ்வாறு செய்யும் நற்செயல்கள் கடவுளின் கணக்கில் வைக்கப்படும். 

கணக்கில் வைக்கப்படும் நற்செயல்கள்
பகிர்:

பிரதிபலனை எதிர்பாராமல் தெய்வ பக்தியுடன் செய்யப்படும் தான தர்மங்களை இறைவன் போற்றுகிறார். அவ்வாறு செய்யும் நற்செயல்கள் கடவுளின் கணக்கில் வைக்கப்படும். 

தற்பெருமைக்காக செய்யப்படுவது தர்மங்களாக இருந்தாலும் இறைவன் கணக்கில் வராது. தான தர்மம் செய்வோர் பலன் கருதாது இறைவனுக்கே செய்கின்றோம் என்று கருதிச் செய்யும்போது போற்றப்படுகிறார்கள். 

இயேசு ஆண்டவர் உயிர்ப்பித்து வானம் வழியாக பரலோகம் சென்றார். இயேசுவின் கட்டளைப்படி அவரின் சீடர்கள் இறை போதனைகளைப் போதித்து கிறிஸ்துவின் சீடராக அநேகரை ஏற்படுத்தி வந்தனர். 

ஒருமுறை இயேசுவின் சீடர் பேதுரு, யோப்பா என்னும் கடற்கரைப் பட்டினத்திற்கு வந்தார். அங்கு இயேசுவின் போதனைகளைப் போதித்தார். அப்பொழுது தொற்காள் என்கிற தபீத்தாள் இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவரின் சிஷ்யையானாள். 

அப்பெண்மணி மிகவும் பக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்தாள். தையற் கலையில் மிகவும் தேர்ந்தவள். சிறந்த ஆடைகளைப் பின்னுவாள். இயேசுவின் போதனைகளைப் பெண்களிடம் போதித்துக் கொண்டே ஆடைகளைப் பின்னி விற்று வந்தாள். ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் ஆடைகளை இலவசமாகத் தந்திடுவாள். அவள் செய்யும் இந்த தர்மம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. 

தபீத்தாள் திடீரென்று நோய்வாய்ப்பட்டு யாரும் எதிர்பாராத வகையில் மரித்துப் போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல் அறையில் கிடத்தி மாலை அடக்கத்திற்கு காத்திருந்தனர். 

யோப்பா பட்டினத்திலிருந்த பேதுருவுக்கு இந்தச் செய்தி சொல்லப்பட்டது. பேதுரு உடனே தம் சீடர்களுடன் தபீத்தாள் மரித்த இடத்திற்கு வந்தார். மாடி அறையில் மரித்தவளைக் கிடத்தியிருந்தனர். 

எல்லா பெண்களும் தங்களுக்கு தபீத்தாள் செய்த தான தர்மங்களையும் சொல்லி அழுதனர். 

பேதுரு அப்பொழுது, தபீத்தாளைக் கிடத்தியிருக்கும் கட்டில் அருகில் சென்று ""தபீத்தாளே எழுந்திரு!'' என்றார். என்ன ஆச்சரியம்? மரித்துப்போன தபீத்தாள் எழுந்து உட்கார்ந்தாள். ஆம்! தபீத்தாள் உயிர்ப்பித்து விட்டாள். பேதுருவின் வார்த்தைகள் அவளை உயிர்ப்பித்து விட்டது. பிறகு அவளைக் கையிலே தூக்கி அவள் தோழிகளிடம் சேர்த்தார். 

துக்கத்தில் ஆழ்ந்திருந்த வீடு, மகிழ்ச்சியில் மிதக்கும் வீடாக மாறியது. 

எல்லாப் பெண்களும், "தபீத்தாளின் தான தர்மம், அவளின் பக்தி, அன்பு, நற்செயல்கள் எல்லாம் கடவுளின் பார்வையில் அருமையானது. எனவேதான் மரித்தவளை பேதுரு மூலம் இறைவன் உயிரோடு எழுப்பினார்!' என்றார்கள். நாமும் தெய்வ பக்தியுடன் தான தர்மங்களைப் புரிவோம்; நம் நற்செயல்களை இறைவன் தம் கணக்கில் வைத்துக் கொள்வார். என்றும் இறையருள் நம்மோடு! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.