பொன்மொழிகள்!
நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர்கள்; உடல் முழுவதும் திருநீறு பூசி ஜபம் செய்பவர்கள்; புண்ணியத் தீர்த்தங்களாடி நோன்புகள் நூற்பவர்கள்; நீண்ட ஜடாமுடிகளை வளர்த்திருப்பவர்கள்
நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர்கள்; உடல் முழுவதும் திருநீறு பூசி ஜபம் செய்பவர்கள்; புண்ணியத் தீர்த்தங்களாடி நோன்புகள் நூற்பவர்கள்; நீண்ட ஜடாமுடிகளை வளர்த்திருப்பவர்கள் இப்படியெல்லாம் இருந்தாலும், எவர்களுக்குக் குருபக்தி இல்லையோ அவர்களுக்கு முக்தி இல்லை.
-மகான் புரந்தரதாசர்
பக்தி என்பது கதறுவதன்று, பிச்சையெடுப்பதன்று; அது ஆனந்தமும், ஈசுவரப் பிரேமையும் நிறைந்தது. "இத்தகையது' என்று எடுத்துச் சொல்ல இயலாத சம பாவனைதான் பக்தி ஆகும். பக்தி நாம் பார்க்கும் எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் பார்ப்பதாகும். அது உங்களுடைய திருஷ்டி விழுகிற இடங்களில் எல்லாம் உங்களுடைய சொந்த ஆத்மாவைப் பார்ப்பதாகும். எல்லாம், "ரம்மியம்' என்றும், அது "நான்தான்' என்றும் அனுபவத்தில் அறிவதே பக்தி எனப்படும். "தத்துவமசி', அதாவது, "நீ அதுவாயிருக்கிறாய்.'
Advertisement
Advertisement
-சுவாமி ராமதீர்த்தர்
"உலக சக்கரத்தை இயக்குவது இயற்கை' என்றும், "காலம்' என்றும் சில சிற்றறிவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் இறைவனுடைய மகிமையே உலகில் இத்தனையுமாக இருக்கிறது.
- உபநிஷதம்
பிறத்தல், இறத்தல் என்ற சம்சாரமே ஒரு கடல். இந்தக் கடலில் உள்ள சம்சாரிகள் சுகம் துக்கம், குளிர் வெப்பம் போன்ற இரட்டைகளால் தாக்கப்படுகின்றனர். அவர்கள் பிள்ளைகள், பெண்கள், மனைவி என்பவர்களுடைய பாரத்தால் அமிழ்ந்தவர்கள்; புலன்களால் நுகரும் சுகங்களாகிய தண்ணீரில் மூழ்கியவர்கள்; கரையேற்றக் கூடிய ஓடமில்லாதவர்கள். அத்தகையவர்களுக்கு ஸ்ரீ விஷ்ணு என்னும் ஓடமே கரையேறுவதற்கு புகலிடமாக இருக்கிறது.
-ஸ்ரீ முகுந்தமாலா
கேவலம் நீரில் மூழ்கி எழுந்திருப்பது மட்டும் ஸ்நானம் ஆகிவிடாது. எவனுடைய இதயம் சுத்தமாக இருக்கிறதோ அவனே பரிசுத்தமானவன்.
-இந்து தர்ம சாஸ்திரம்
"அனைத்தையும் தன்னுள் கொண்ட வடிவம்', "பிரிதாகித் தனித்து நிற்கும் வடிவம்' என்று இரண்டு பொருள்கள் இருக்கின்றன. இவை எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டவை ஆகும். அனைத்தையும் தன்னுள் கொண்டது "ஈசுவர வடிவம்' என்றும், தனித்து நிற்பது "ஜீவ வடிவம்' என்றும் வேதாந்தம் முழங்குகிறது.
-வேதாந்த முழக்கம் - 6.
"இந்த உலகத்தில் சுகம் கிடைக்கிறது' என்ற எண்ணத்தில் மனிதர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே காலம் அவர்களை விழுங்கிவிடுகிறது. இந்தக் காலத்திடமிருந்து தப்பிப்பவர்கள் யாரும் இல்லை; சத்தியத்தை உணர்ந்துகொள்.
-ஸ்ரீ ராமபிரான்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.