மலை மீது அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த சிவதலம் அய்யர்மலை அருள்தரும் சுரும்பார்குழலி சமேத ரத்தினகிரீசுவரர் கோயில். இறைவன் சுயம்பு மூர்த்தம். பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 64-ஆவது தேவார திருத்தலம்.
மன்னன் ஒருவன் தமது நவரத்தின கிரீடம் காணாமல் போனதால் ஈசனைத் துதிக்க, வயதான அந்தணர் ஒருவர் ரத்தினகிரீசுவரரிடம் அந்த கிரீடம் உள்ளதாய் தெரிவிக்க, மன்னன் ரத்தினகிரீசுவரரிடம் வந்து தமது மணிமுடியைத் தருமாறு வேண்டினார். வேதியர் வடிவில் வந்த இறைவன், இங்குள்ள கொப்பரையை முழுமையாக காவிரி நீர் கொண்டு நிரப்பினால் மணிமுடியைத் தருவதாகச் சொல்ல, மன்னன் எவ்வளவோ முயன்றும் கொப்பரை நிரம்பாததால் கோபம் கொண்டு வேதியரை வாளால் வெட்ட முயற்சித்தார்.
வேதியர் சிவலிங்கத்துக்குள் மறைய, வெட்டு லிங்கத்தில் பட்டு குருதி பீறிட்டது. தெய்வக் குற்றத்துக்கு ஆளானதை எண்ணி அஞ்சிய மன்னன் தன்னைத் தானே வெட்டிக்கொள்ள முயற்சிக்க, இறைவன் அவனைத் தடுத்து ஆட்கொண்டு மணிமுடியையும் கொடுத்தருளினார். சுவாமி மேல் வெட்டுத் தழும்பு உள்ளதை இன்றும் காணலாம்.
கோயில் கல்வெட்டுகளில், "இறைவர் மாணிக்க மலை மகாதேவர், மாணிக்க மலை உடைய நாயனார், திருமாணிக்க மலை உடைய தம்பிரான் ஆனார். இறைவி திருக்காம கோட்டமுடைய பெரிய நாச்சியார்' என்ற திருநாமங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இங்குள்ள பொன்னிடும் பாறைக்கு முன்புறம் உள்ள கம்பத்தைச் சுற்றி நூலால் கட்டி பில்லி, சூனியம், ஏவல், பல்வேறு தடைகள் நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.
திருப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, பிப்ரவரி 22}ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
கரூர்-திருச்சி சாலை குளித்தலையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது.
- பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.