முகப்பு
வெள்ளிமணி

இழந்ததைத் திரும்பப் பெற...

புராணக் கதைகளின்படி ஈசனிடம் சாகா வரம் பெற்ற அசுரன் ஒருவன், பூமியில் மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

Updated On : 19 ஜூன் 2026, 1:26 pm IST
பகிர்:

தமிழ்நாட்டில் சக்தி வழிபாட்டுக்குரிய சிறப்புமிக்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது சிவகங்கை மாவட்டத்தில், பாகனேரியில் உள்ள புல்வநாயகி அம்மன் கோயில். புராணத்துடன் தொடர்புடையது.

புராணக் கதைகளின்படி ஈசனிடம் சாகா வரம் பெற்ற அசுரன் ஒருவன், பூமியில் மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். அவனை அழித்துத் தங்களைக் காக்கும்படி மக்கள் ஈசனை வழிபட்டனர். அம்பிகையின் மூலம் அசுரனைக் கொல்ல இறைவன் திட்டமிட்டார். அதேசமயம், கயிலாயத்தில் தன் திருக்கரங்களால் பரமேஸ்வரரின் கண்களை விளையாட்டாக மறைத்தார் பார்வதி. உடனே, உலகமெல்லாம் இருளாகிப் போனது.

கோபமடைந்த சுவாமி, தன்னைப் பிரிந்து தேவியை காளிரூபமாக பூமியில் பிறக்குமாறு உத்தரவிடுகிறார். தவறை உணர்ந்த பரமேஸ்வரி, ""இதிலிருந்து எப்போது விமோசனம் கிடைக்கும்?'' எனக் கேட்கிறார்.

Advertisement

Advertisement

சுவாமியும் கோபம் தணிந்து, ""அசுரன் புல்லை வனத்துக்குள் வரும் சமயம், உன்னிடம் யுத்தம் செய்வான். நீ அவனை வீழ்த்தியவுடன் உனக்கு விமோசனம் கிடைக்கும். நீயும் என்னை வந்து அடைவாய்'' என்றருளினார்.

அந்தத் தருணமும் விரைவில் வந்தது. அன்னையை வெல்ல பல மாய வித்தைகள் செய்து அரக்கன் பெரும் யுத்தமிட்டான். ஒருகட்டத்தில் புல்லை வனத்தில் அசுரன் அம்பாளுக்குப் பயந்து புல்லாக மாறி ஒளிந்துகொண்டான். அதைக் கண்ட பரமேஸ்வரி, மானாக மாறிப் புல்லைத் தின்று அசுரனை தன்னுள் அடக்கி, மக்களைக் காத்து அருளினார். பின்னர் ஆக்ரோஷம் நீங்கி இறைவனை அடைந்தார் என்கிறது வரலாறு.

தமிழில் புல்வாய் என்றால் மான் என்று பொருளாகும். புல்லாக மாறிய அசுரனை , மானாக மாறி உண்டு அன்னை அடக்கியதால் இங்கு கோயில் கொண்ட அம்மனுக்கு புல்வ நாயகி என திருநாமம் உண்டாயிற்று. பூமியில் புதையுண்டிருந்த அன்னையின் சிலையை மக்கள் வெளிக்கொணர்ந்து கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

அசுரனை அம்பாள் போரில் வீழ்த்தியதை அறிந்த அசுரனின் மனைவியான வேதாளம் கண்ணீருடன் அம்பாளை சரணடைந்து, தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முறையிட்டிருக்கிறார் .

இரக்கம் கொண்ட அம்மன், அவளுடைய சுமங்கலி பாக்யம் நிலைக்குமாறு அசுரனை தன் காலடியிலேயே என்றும் இருக்கட்டும் என்று வாக்கு கூறியுள்ளார். அதேபோல தனக்குச் செய்யப்படும் அனைத்து பூஜை வழிபாடுகளும் வேதாளத்துக்கும் கிடைக்கட்டும் என்றும், தன்னை நாடி வரும் அடியார்களின் குறைதீர்க்கும் பிரதிநிதியாக இருக்கவும் அருளியுள்ளார்.

தன் கணவனைக் காத்து அருளியது போலவே பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அருளுமாறும் வேதாளம் கொடிமரத்தின் முன்பு புல்வ நாயகி அம்மனை நோக்கியவாறு தன் பக்தர்களுக்காக இரு கைகளையும் ஏந்தி நின்றபடி பரோபகாரியாக விளங்குகிறார்.

தலவிருட்சமாக நெய்கொட்டா மரம் உள்ளது. இங்குள்ள வஜ்ர தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், பணம், பொருள் இழந்தவர்கள் உள்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வஜ்ர தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அம்பிகை முன் உள்ள கொடிமரத்தைக் கட்டிக்கொண்டு தங்கள் குறைகளைச் சொல்லி வணங்குகின்றனர். அதனால் அவர்களுக்கு நற்பலன் கிடைக்கிறதாம்.

புல்வநாயகி அம்மன் கோயிலில் ஜூன் 20}ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது 11 நாள்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான 9}ஆம் திருநாளில் தேரோட்ட வைபவம் மிக சிறப்பாக நடைபெறும். அம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு நடக்கும் திருவிழாவின்போது மஞ்சு

விரட்டு நடத்தி, நேர்த்திக்கடன் செலுத்தும் வித்தியாசமான வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

தரிசனத்துக்காக காலை 6 மணி முதல் 11.30 வரையும், மாலை 4 முதல் 7.30 வரையும் கோயில் திறந்திருக்கும். சிவகங்கையில் இருந்து (24 கி.மீ.) மதகுபட்டி சென்று, அங்கிருந்து பாகனேரியில் (6 கி.மீ.) உள்ள புல்வநாயகி அம்மன் கோயிலை அடையலாம்.

- சோழவந்தான் ஜெனகராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments