மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு ராவல்பிண்டி நீதிமன்றம் நோட்டீஸ்
மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்கள் 24 பேரையும் ஒரு வாரத்துக்குள் நேரில் ஆஜர்படுத்த முடியுமா?
மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்கள் 24 பேரையும் ஒரு வாரத்துக்குள் நேரில் ஆஜர்படுத்த முடியுமா? என்பது குறித்து பதிலளிக்கக்கோரி பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு ராவல்பிண்டி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கடல்வழியாக ஊடுருவி கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், பாகிஸ்தான் அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட 70 சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் ராவல்பிண்டி நீதிமன்றம் பதிவு செய்து விட்டது. எனினும், சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்கள் 24 பேரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்தால் மட்டுமே விசாரணை முடிவடையும் நிலை காணப்படுகிறது.
எனவே, 24 பேரையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியது. இந்த கடிதத்துக்கு இந்தியா அளித்த பதிலில், மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீதை முதலில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ராவல்பிண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்கள் 24 பேரையும் வரும் ஜூலை மாதம் 5ஆம் தேதிக்குள் நேரில் ஆஜர்படுத்த முடியுமா? என்பதற்கு பதிலளிக்கக்கோரி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 24 இந்தியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதில்லை என்று இந்தியா பிடிவாதமாக இருப்பதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை மாதம் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 7 லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் லக்வி மட்டும் கடந்த 2015ஆம் ஆண்டில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய அனைவரும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.