ஸ்டாக்ஹோம்: இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்று நோபல் பரிசு தேர்வுக்குழு ஒருமனதாக அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு வருடம் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது உலகின் துறை சார்ந்த உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விருதுக்கான நபர்களை ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள நோபல் பரிசு தேர்வுக்குழு கூடி முடிவு செய்து அறிவிக்கும்.
இந்நிலையில் இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்று நோபல் பரிசு தேர்வுக்குழு ஒருமனதாக அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக நோபல் பரிசு தேர்வுக்குழுவின் வாராந்திர கூட்டம் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.அப்பொழுது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெள்ளியன்று வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
நோபல் பரிசு தேர்வுக் குழுவினர் சிலர் மீது தற்பொழுது பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளும், பண முறைகேடு தொடர்பான புகார்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு உரியவரை தேர்தெடுக்கும் நிலையில் தேர்வுக்கு குழு தற்பொழுது இல்லை என்று நினைக்கிறோம்.
மங்கி வரும் தேர்வுக்குழுவின் மீதான அபிப்ராயம் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுளள நம்பிக்கை குறைபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கான விருது 2019-ஆம் ஆண்டு வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போர் சமயமான 1943-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்பொழுதுதான் விருதுகள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.