சென்னை விமான நிலையத்தில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பயணிகள் ஓய்வுக் கூடம்!
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வுக் கூடம் இன்னும் பயன்பாட்டுக்கு வராதது குறித்து...
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ‘பிளாசா’ பயணிகள் ஓய்வுக் கூடம் மற்றும் பயணிகளை ஏற்றுமிடம் (பிக்அப் பாயிண்ட்), கட்டுமானப் பணிகள் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள், நடைமுறைகளை முடித்து வெளியே வருவதற்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதன்பிறகு மல்டி லெவல் காா் பாா்க்கிங்கில் உள்ள தற்போதைய பயணிகள் ஏற்றுமிடத்தை அடைய பேட்டரி வாகனங்களுக்காக மீண்டும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். நாட்டின் பிற முக்கிய சா்வதேச விமான நிலையங்களில் இல்லாத இந்த சிரமம், சென்னை விமான நிலையத்தில் மட்டுமே நீடிப்பதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
பிக்அப் பாயிண்ட்டுடன் கூடிய ஓய்வுக் கூடம்: இந்த நிலையில், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், கடந்த 2023-இல், வருகைப் பகுதியில் 1-ஆவது முனையத்துக்கு எதிரே ‘பிளாசா’ என்ற பயணிகள் ஓய்வுக் கூடம் மற்றும் புதிதாக பயணிகள் ஏற்றுமிடத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2024 அக்டோபரில் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுமானப் பணிகள் 2026 மே மாதத்தில்தான் நிறைவடைந்தன.
Advertisement
Advertisement
அனைத்து பணிகளும் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இந்த வளாகம் இன்னும் திறக்கப்படவில்லை. கடந்த ஜூலை 2-ஆவது வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் தொடங்கியும் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், ‘பிளாசா’ பயணிகள் ஓய்வு கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இறுதி அனுமதி அவசியமாக உள்ளது. அந்த அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே திறப்பு விழா தள்ளிப்போக காரணம் என தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.