20 லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்ட வழக்கு: கம்போடிய முன்னாள் பிரதமர் குற்றவாளி என்று அறிவிப்பு
20 லட்சம் அப்பாவிகள் இனப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கம்போடிய முன்னாள் பிரதமர் ஈவில் நுவன்ஸியா உட்பட இருவர் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது
நாம் பென்: 20 லட்சம் அப்பாவிகள் இனப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கம்போடிய முன்னாள் பிரதமர் ஈவில் நுவன்ஸியா உட்பட இருவர் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கம்போடியாவில் 1970-ஆம் ஆண்டு சர்வாதிகாரி போல்பாட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் சுமார் 20 லட்சம் கம்போடிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
பொதுமக்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி, பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தது.
Advertisement
Advertisement
நாற்பது வருடங்களைக் கடந்த நிலையில் கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த, இன்றும் உயிருடன் இருக்கின்ற நான்கு மூத்த தலைவர்கள் மீது ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய அந்த வழக்கு விசாரணையானது 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்தது.
விசாரணையின்போது குறிப்பிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர். இந்த வழக்கில் நாலாயிரம் பேர் சிவில் தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அப்போது நடந்த கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இவர்களின் சாட்சியங்களும் வழக்கு விசாரணைகளின் போது முக்கியமான ஒன்றாக மாறின.
இறுதியில் கெமரூஜ் ஆட்சியின் போது இருந்த இரண்டு தலைவர்களான முன்னாள் பிரதமர் ஈவில் நுவன் ஸியா (92) மற்றும் 87 வயதான கியு சாம்பன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டில் இருந்த சாம் முஸ்லிம்கள் மற்றும் இனவழி வியட்நாமியர்கள் பலரைக் கொன்று குவித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.