FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீனாவில் அதிர்ச்சி... ஒரே நாளில் 3.7 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம்?  

சீனாவில் இந்த வாரத்தின் ஒரே நாளில் சுமார் 3.7 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Updated On : 24 டிசம்பர் 2022, 4:00 pm IST
பகிர்:

சீனாவில் இந்த வாரத்தின் ஒரே நாளில் சுமார் 3.7 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சீனாவில் கண்டறியப்பட்டு பரவத் தொடங்கிய கரோனா, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வந்த நிலையில், சமீப காலமாக அதன் பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். 

இந்நிலையில், சீனாவில் புதிய கரோனா அலை எழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அது தவிர, அமெரிக்கா, தென்கொரியா போன்ற பிற நாடுகளிலும் அந்த நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

சீன அரசாங்கத்தின் தேசிய சுகாதார ஆணையத்தின் கணிப்பின்படி, இந்த வாரத்தின் ஒரே நாளில் சீனாவில் சுமார் 3.7 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்படலாம், இது உலகின் மிகப்பெரிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையாகவும், டிசம்பர் முதல் 20 நாள்களில் 24 கோடியே 80 லட்சம் பேர் அல்லது  சீன மக்கள் தொகையில் சுமார் 18 சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது.

அதிலும், சீனாவின் தென்மேற்கில் உள்ள கிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொற்று பாதிப்பால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய சீன நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் திடீரென தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாம் திணறி வருகின்றன.  

உலகின் மற்ற நாடுகளில் கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையிலும், தனது ‘பூஜ்ய கரோனா’ கொள்கையை சீனா விடாப்பிடியாக கடைபிடித்து வந்தது.

அந்தக் கொள்கையை இவ்வளவு காலத்துக்கு சீன அரசு நீட்டித்து வைத்திருக்கும் என்று நிபுணா்கள் எதிா்பாா்க்காத நிலையில், திடீரென கடந்த மாதம் சீனாவில் கரோனா பரவல் அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து கடுமையான கரோனா கட்டுப்பாடுகளை  சீன அரசு விலக்கிக்கொண்டது. 

இதனால், அந்த நாட்டில் குறைந்த அளவிலான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்கள்தொகையில் மிகவும் விரைவில் பரவும் ஓமைக்ரான் வகைகளின் தொற்று தடையின்றி மிகத் தீவிரமாக பரவுவதற்கு வழிவகுத்தது. பரிசோதனைகளும் குறைக்கப்பட்டன. இதனால் பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியவராமலே போனது. 

இதனிடையே சீனாவில் உள்ள மக்கள் இப்போது தொற்றுநோய்களைக் கண்டறிய விரைவான ஆன்டிஜென் சோதனைகளைப் பயன்படுத்துகின்றனர், மேலும், அவர்கள் தொற்று பாதிப்பு குறித்து முடிவுகளை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், அறிகுறியற்ற வழக்குகளின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருவதால் பிற பகுதிகளில் கடுமையான தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த தொற்று பரவல் நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு பரவுவதாகவும்,  அங்கு பெரும்பாலும் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ளதால், வரவிருக்கும் கடுமையான தொற்று பரவலை சந்திப்பதற்கு தயாராகுமாறு ஒவ்வொரு பிராந்தியத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments