இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 68 பாலஸ்தீனர்கள் பலி!
மத்திய காஸா பகுதியில் வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய தரப்பில் 17 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
டெய்ர் அல் பலாஹ், காஸா: மத்திய காஸா பகுதியில் வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய தரப்பில் 17 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
காஸாவில் மகாஸி அகதிகள் முகாமிலிருந்து இறந்தவர்களையும் ஒரு குழந்தை உள்பட காயமுற்றவர்களையும் தூக்கிக்கொண்டு பாலஸ்தீனர்கள் ஓடுவதைப் பார்த்ததாக அசோசியேடட் பிரஸ் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட 68 பேரில் 12 பேர் பெண்கள், 7 குழந்தைகள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
எங்களை எல்லாரையும் குறிவைத்துத் தாக்குவதாகத் தன்னுடைய மகள், பேத்தி உள்பட குடும்பத்தினர் பலரையும் இஸ்ரேலிய தாக்குலில் இழந்துவிட்ட அகமது துர்கோமனி என்பவர் குறிப்பிட்டார்.
கிறிஸ்துமஸ் என்றாலும் இந்தப் பகுதி முழுவதும் புகை சூழ்ந்து எழுந்தபடி இருக்கிறது. மேற்குக் கரையிலுள்ள புனித நகரான பெத்லஹேம் வெறிச்சோடிக் கிடக்கிறது. விடுமுறைக் கொண்டாட்டங்கள் எல்லாமும் ரத்து செய்யப்பட்டு விட்டன.
காஸா மீதான இஸ்ரேலிய போர் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 20,400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அனேகமாக, இந்தப் பகுதியிலிருந்த 23 லட்சம் மக்களுமே இடம் பெயர நேரிட்டிருக்கிறது.