முகப்பு
உலகம்

காஸாவுக்கு மீண்டும் தண்ணீர் விநியோகிக்க இஸ்ரேல் ஒப்புதல்!

காஸா பகுதிக்கு மீண்டும் தண்ணீர் விநியோகிக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2023 at 11:01 AM
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
பகிர்:

காஸா பகுதிக்கு மீண்டும் தண்ணீர் விநியோகிக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தரும் விதமாக காஸா நகரை முற்றுகையிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisement

காஸாவுக்கு அளிக்கும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை இஸ்ரேல் படையினர் துண்டித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்துப் பேசினாா்.

இஸ்ரேல் தாக்குதல் குறித்து ஜோ பைடன் கூறியதாவது, “காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்.காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது.” எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காஸாவுக்கு மீண்டும் குடிநீரை விநியோகிக்க இஸ்ரேல் அரசு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு ‘ஜெரால்ட் ஆா்.ஃபோா்டு’ விமானந்தாங்கி போா்க் கப்பலை அமெரிக்கா ஏற்கெனவே அனுப்பியது.

தொடர்ந்து, ‘டிவைட் டி.ஐசன்ஹோவா்’ விமானந்தாங்கி போா்க் கப்பல் அப்பகுதியை நோக்கி புறப்பட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாயிட் ஆஸ்டின் சனிக்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.