ஆடிப்பெருக்கு: மகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி...
கரூர்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18-க்கு மறுநாள் 19 ஆம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
நிகழாண்டும் கோயில் விழா திங்கள்கிழமை காலை கோயிலில் இருந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீர் எடுத்து வருதலுடன் தொடங்கியது.
Advertisement
Advertisement
இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று புனித நீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து மாலையிலும் கோயிலில் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் பூசாரி பெரியசாமி தலைமையில் கோயில் வளாகத்திற்குள் தயாராக விரதம் இருந்து அமர்ந்திருந்த பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தலையில் தேங்காய் உடைக்கப்படும் போது தலையில் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக இரண்டு ஆம்புலன்ஸ் வேன்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே தலையில் தேங்காய் உடைத்ததில் மூன்று பக்தர்கள் காயம் அடைந்ததையடுத்து அவர்களுக்கு ஆம்புலன்ஸில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கோயிலில் மாயனூர் மற்றும் லாலாப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Aadi Perukku: Devotees fulfill vows by having coconuts broken on their heads at the Mahadhanapuram temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.