முகப்பு
உலகம்

லிபியாவை புரட்டிப்போட்ட புயல்: 11 ஆயிரத்தைத் தாண்டிய பலி: 10,000 பேர் மாயம்!

லிபியாவில் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Updated On : 15 செப்டம்பர் 2023, 3:09 pm IST
பகிர்:

லிபியாவில் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியா, மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ளது. அந்தக் கடலில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவைக் கடந்தது.அதன் விளைவாக தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, அந்தப் பகுதியில் ஓடும் வாடி டொ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 

இதன் விளைவாக, அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகளில் உடைந்து வெள்ள நீா் அருகிலுள்ள டொ்ணா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாய்ந்தது.வாடி டொ்ணா உருவாகும் மலைப் பகுதிக்கும், அது மத்தியதரைக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கும் இடையே டொ்ணா நகரம் அமைந்துள்ளதால் அணை உடைந்து பாய்ந்து வந்த வெள்ள நீா் அந்த நகரிலிருந்த வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை அடித்துச் சென்று கடலுக்குள் தள்ளியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் வியாழன் நிலவரப்படி டெர்னாவில் பலியானோர் எண்ணிக்கை 11,300 ஆகவும், மேலும் 10 ஆயிரம் பேர் காணவில்லை என்றும் லிபிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. 

மத்திய தரைக்கடல் புயல் டேனியல் நாட்டின் பிற இடங்களில் பாதித்துள்ளது. இதன்காரணமாக 170 பேர் பலியாகினர்.

லிபியாவில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த கடாஃபியின் ஆட்சியை நேட்டோவின் ஆதரவுடன் கிளா்ச்சியாளா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு கவிழ்ந்தனா்.அதன் பிறகு பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதிக் கொண்ட அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் திரிபாலியைத் தலைநகராகக் கொண்ட ஓா் அரசும், அதற்குப் போட்டியாக கிழக்கே மற்றோா் அரசும் நடைபெற்று வருகின்றன.

அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் குழப்பம் காரணமாக, நாட்டின் உள்கட்டமைப்பை பராமரிக்க முடியாமல் போனதால்தான் வாடி டொ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைகள் தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காணாமல் போனாவர்களை தேடும் பணி இரவும், பகலும் நடைபெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.