பயங்கரவாதியுடன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர்! வைரலானது விடியோ
பயங்கரவாதியுடன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் இருக்கும் விடியோ வெளியாகியிருக்கிறது.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே, பாகிஸ்தான் வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றது முதல் முறை என்ற சாதனையை அர்ஷத் நதீம் கடந்த 8ஆம் தேதி படைத்திருந்த நிலையில், அவர் பாகிஸ்தான் பயங்கரவாதியுடன் இருக்கும் விடியோ வைரலாகியிருக்கிறது.
அமெரிக்காவால், பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கும் முகமது ஹரிஸ் தார் என்பவருடன் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பேசுபொருளாகி வருகிறது.
கடந்த வாரம், பாகிஸ்தான் சார்பில் பங்கேற்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இவருடன் போட்டியிட்ட இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். பாகிஸ்தான் சார்பில் போட்டியிட்டு முதல் தங்கப் பக்கத்தை வென்ற வீரர் என்பதால், உலகளவில் அர்ஷத் நதீம் பற்றி பேசப்பட்டது.
Advertisement
Advertisement
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முதல் தங்கத்தை வென்றதால், கடந்த 11ஆம் தேதி தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்பிய நதீமுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வாரம், அவர் பயங்கரவாதியுடன் இருக்கும் விடியோ வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புப் பிரிவு அளித்திருக்கும் தகவலின் அடிப்படையில், முகமது, மிலி முஸ்லிம் லீக் கட்சியின் இணைச் செயலாளராக உள்ளார். இது லஷ்கர் - இ - தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் சார்பில் இயங்கும் அரசியல் கட்சியாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தலைமையில் இந்த எம்எம்எல் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான், கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்க கருவூலத் துறையால், எம்எம்எல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
2017ஆம் ஆண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டு 2018ல் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பினால், அந்தக் கட்சி, அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாமலேயே இயங்கி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.