முகப்பு
உலகம்

பாக். வன்முறை: காயமடைந்தோருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம்!

பாகிஸ்தானில் வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Updated On : 17 டிசம்பர் 2024, 10:33 pm IST
- (கோப்புப்படம்)
பகிர்:

பாகிஸ்தானில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், காயமடைந்தவர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன.

பாகிஸ்தானிய தொண்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று ஏர் ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி வடமேற்குப் பகுதிக்கு மருந்துகளை விநியோகித்து வருகிறது. அங்கு கடந்த இரண்டு மாதங்களில் போதிய மருந்து வசதிகள் இல்லாததால் 29 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏர் ஆம்புலன்ஸ்கள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. குர்ரம் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 130 பேர் பலியாகினர். இதனால், மாவட்டம் முழுவதும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

குர்ராமில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களுக்கு இடையே வெடித்த வன்முறையில் அக்டோபர் முதல் உணவு மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

நிலத் தகராறில் தொடங்கிய மோதல், நவம்பரில் மதவெறி வன்முறையாக மாறியது. போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், இன்னும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

நவம்பர் மாதத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் வாகனத்தில் சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்கியதிக் 52 பேர் கொல்லப்பட்டனர்.

உயிர்காக்கும் மருந்து தட்டுப்பாட்டால் கடந்த 2 மாதங்களில் 29 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குர்ரமில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் மிர் ஹாசன் ஜான் தெரிவித்துள்ளார். இதனால், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

சன்னி மக்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் உள்ள 240 மில்லியன் மக்களில் ஷியா முஸ்லிம்கள் 15 சதவீதம் பேர் உள்ளனர். இதனால், அடிக்கடி சமூகங்களுக்கு இடையே மதவெறி வன்முறைகள் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.