காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 போ் உயிரிழந்தனா்; 91 போ் காயமடைந்தனா்.
இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 39,006 போ் உயிரிழந்துள்ளனா்; 89,818 போ் காயமடைந்துள்ளனா்.
கான் யூனிஸ் பகுதியில் குறுகிய கால முன்னறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் மட்டும் 70-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அந்த நாட்டுக்குச் செல்லும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.