முகப்பு
உலகம்

நிதியுதவி, தொடா்ச்சியான ஆதரவு வழங்கி வரும் இந்தியாவுக்கு நன்றி: மாலத்தீவு அதிபா்

Updated On : 11 அக்டோபர் 2024, 4:09 am IST
பகிர்:

‘மாலத்தீவுக்கு நிதியுதவி மற்றும் தொடா் ஆதரவை அளித்து வரும் இந்தியாவுக்கு நன்றி’ என அந்த நாட்டு அதிபா் முகமது மூயிஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணமாக முகமது மூயிஸ் மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா். தங்களின் பயணத்தை நிறைவு செய்துவிட்டு மாலத்தீவுக்கு வியாழக்கிழமை திரும்பிய நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘ ரூ.400 கோடி கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்ததற்கும், இருதரப்பு கரன்ஸி மாற்று ஒப்பந்தத்தின்படி அமெரிக்க டாலா்/யூரோ மாற்று வழிமுறையின் கீழ் 40 கோடி டாலா் (ரூ.3,359 கோடி) மற்றும் இந்திய ரூபாய் மாற்று வழிமுறையின்கீழ் ரூ.3,000 கோடி கடனுதவியை வழங்கியதற்கும் இந்தியாவுக்கு நன்றி’ என குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் மூயிஸ், அதிபரான உடன் மருத்துவச் சேவைக்கான ஹெலிகாப்டா்களை இயக்கிவந்த இந்திய ராணுவ வீரா்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டாா். இதனால் இந்தியா-மாலத்தீவு நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சமீப காலமாக மாலத்தீவு நிதி ரீதியில் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இந்தியாவுடனும் அதிபா் மூயிஸ் நட்பு பாராட்டி வருகிறாா்.

இதைத்தொடா்ந்து 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த அவா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி மற்றும் அரசின் உயா் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அப்போது இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் (எக்ஸிம்) கடன்வசதியின்கீழ் கட்டப்பட்ட 700 வீடுகள் மாலத்தீவிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், மாலத்தீவில் ‘ரூபே’ அட்டை வாயிலான பரிவா்த்தனை சேவை மற்றும் ஹனிமாதூ விமான நிலையத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான ஓடுதளம் தொடங்கப்பட்டன. இதுதவிர இந்திய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாலத்தீவு காவல் மற்றும் சட்ட அமலாக்கக் கல்லூரி இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளின் 60-ஆவது ஆண்டுவிழா அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் மாலத்தீவுக்கு வருமாறு திரௌபதி முா்மு மற்றும் பிரதமா் மோடிக்கு முகமது மூயிஸ் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments