ஈரான்: நிலக்கரி சுரங்கத்தில் விபத்து! 30 பேர் பலி!
காயமடைந்த 17 பேருக்கு சிகிச்சை
ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 30 பேர் பலியாகினர்.
ஈரானில் தபஸ் கௌண்டியில் உள்ள மதன்ஜூ நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்ததால், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தில் 69 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
இருப்பினும், இந்த விபத்தால் 30 பேர் பலியான நிலையில், 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் நாட்டின் நிலக்கரியில் 76 சதவிகிதம், இந்த பகுதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது. இந்த சுரங்கப் பகுதிகளில் மதன்ஜூ உள்பட 8 பெரிய நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.
மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர் உள்பட 13 ஆம்புலன்ஸ்கள், 40 ஆயுதமேந்திய குழுக்கள், 100 பேர் வரையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், நிலக்கரி சரிந்து கிடப்பதால், மீட்புப் பணிகளில் கடினம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் நடந்து வரும் ஐநா சபைக் கூட்டத்திற்கு செல்ல, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தயாராகி வரும் நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், ஈரான் அதிபர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும், பாதிப்படைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் தகவல்களாக, ஈரானில் சுரங்க விபத்து ஏற்பட்டிருப்பது இது முதல்முறை அல்ல.
2023 ஆம் ஆண்டில், ஈரானின் டம்கன் நகரில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியாகியிருந்தனர். அதற்கு முன்னதாக, 2021 ஆம் ஆண்டிலும், அதே சுரங்கத்தில் நிலக்கரி இடிந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
மேலும், 2017 ஆம் ஆண்டில், ஆசாத் ஷஹரில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 43 பேர் பலியாகியிருந்தனர்.