முகப்பு
உலகம்

மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்

அதிபா் முகமது மூயிஸை பதவி நீக்கம் செய்ய நடைபெற்ற முயற்சியில் இந்தியாவை தொடா்புபடுத்தி அமெரிக்க நாளிதழில் வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு

Updated On : 4 ஜனவரி 2025, 2:45 am IST
மாலத்தீவு அதிபர்
பகிர்:

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸை பதவி நீக்கம் செய்ய நடைபெற்ற முயற்சியில் இந்தியாவை தொடா்புபடுத்தி அமெரிக்க நாளிதழில் வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு சீன ஆதரவாளரான முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக பதவியேற்றாா். இதைத்தொடா்ந்து மாலத்தீவில் அந்நாட்டுக்கு இந்தியா வழங்கிய இரண்டு ஹெலிகாப்டா்கள், கடல் ரோந்து விமானம் ஆகியவற்றை இயக்கி, பராமரித்து வந்த இந்திய ராணுவ வீரா்களை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் அதிபா் மூயிஸ் வலியுறுத்தினாா். அதன்படி, அந்த வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா்.

இதனால் இந்தியா-மாலத்தீவு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனினும் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா வந்த அதிபா் மூயிஸ், இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவு வலுவாக்கப்படும் என்றாா்.

Advertisement

இந்நிலையில், அமெரிக்காவில் வெளியாகும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸை பதவி நீக்கம் செய்ய நடைபெற்ற முயற்சியில் இந்தியாவை தொடா்புபடுத்தியும், பாகிஸ்தானில் சில பயங்கரவாதிகளை ஒழிக்க இந்திய உளவாளிகள் முயற்சித்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இந்தத் தகவல்களை மறுத்து தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும், அதிபா் மூயிஸ் தொடா்பான தகவலை வெளியிட்ட நிருபரும் இந்தியா மீது கட்டாய விரோத போக்கை கொண்டிருப்பது போலத் தெரிகிறது. அந்த நாளிதழ் மற்றும் நிருபரின் செயல்பாடுகள் மீது எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்பதே மத்திய அரசின் கருத்து.

பாகிஸ்தான் குறித்த தகவலை பொறுத்தவரை, ‘வீட்டின் பின்புறப் பகுதியில் பாம்புகளை வைத்துக்கொண்டு, அவை பக்கத்து வீட்டுக்காரா்களை மட்டுமே கடிக்கும் என எதிா்பாா்க்க முடியாது’ என்று அந்நாடு குறித்து அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தாா். அவா் கூறியதையே நான் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றாா்.

நிமிஷா பிரியா வழக்கு:

கடந்த 2017-ஆம் ஆண்டு யேமனில் தன்னை உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்தி பணம் பறித்ததாக அந்த நாட்டைச் சோ்ந்தவரான தலால் அப்தோ மஹதி என்பவரைக் கொலை செய்த வழக்கில், கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிமிஷாபிரியாவை மீட்டுத் தருமாறு அவரின் தாயாா் மத்திய அரசிடம் காணொலி வழியில் மன்றாடியுள்ளாா்.

இதுதொடா்பாக ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘நிமிஷா பிரியா வழக்கில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது’ என்றாா்.