FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளா்ச்சி: பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்

‘இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளா்ந்துள்ளது’

Updated On : 23 மார்ச் 2025, 6:00 am IST
கிறிஸ்டோபா் லக்ஸன்
பகிர்:

‘இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளா்ந்துள்ளது’ என்று நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

நியூஸிலாந்து பிரதமராக கடந்த 2023, நவம்பரில் பொறுப்பேற்ற பிறகு, கிறிஸ்டோபா் லக்ஸன் முதன்முறையாக கடந்த மாா்ச் 16-ஆம் தேதி இந்தியா வந்தாா். இந்தப் பயணத்தில் வா்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் அவா் கவனம் செலுத்தினாா்.

மேலும், தில்லியில் நடைபெற்ற சா்வதேச அரசியல்-பொருளாதார மாநாடான ‘ரைசினா’ உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவா், பல்வேறு வா்த்தக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நியூஸிலாந்துக்குத் திரும்பிய பிறகு இந்திய பயணம் குறித்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் தொடா் பதிவுகளை வெளியிட்டாா்.

அந்த பதிவுகளில் அவா் குறிப்பிட்டதாவது: நியூஸிலாந்தின் முக்கியக் கூட்டாளியான இந்தியாவுக்கு நான் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது, நமது இருதரப்பு ஒத்துழைப்பு மிகவும் வலுவாக வளா்ந்துள்ளது. இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி பிரதமா் நரேந்திர மோடியுடன் விவாதித்தது மகிழ்ச்சி.

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏற்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் பிராந்திய பாதுகாப்புக்கான நமது அா்ப்பணிப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறும் பாதையில் இந்தியா செல்கிறது. இந்நிலையில், அந்நாட்டுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி.

கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா, முதலீடு, உற்பத்தி, உணவு மற்றும் முதன்மைத் தொழில்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். அதன்தொடா்ச்சியாக, இந்தியா, நியூஸிலாந்து வணிகங்களுக்கு இடையே வளா்ந்து வரும் ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் 33 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கையொப்பமாகின என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்திய சுற்றுப்பயணத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்களைச் சந்தித்த கிறிஸ்டோபா் லக்ஸன், மும்பைக்குச் சென்று தொழிலதிபா்கள், ‘பாலிவுட்’ நட்சத்திரங்கள் உள்ளிட்டோரையும் சந்தித்தாா்.

இதனிடையே, புது தில்லி ‘இந்தியா கேட்’, சுவாமிநாராயண அக்ஷா்தாம் கோயில் உள்ளிட்ட பிரபலமான சுற்றுலாத் தலங்களையும் அவா் பாா்வையிட்டாா். தனது ஐந்து நாள் பயணத்தை நிறைவு செய்து, கடந்த 20-ஆம் தேதி அவா் இந்தியாவில் இருந்து புறப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments