எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வு! 1 லட்சம் டாலர் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்? -அமெரிக்க அரசு விளக்கம்
எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வு: புதிய நெறிமுறைகள் வெளியீடு!
எச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து திறமையான பணியாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்குப் பயிற்சி அளித்து பணி வழங்க அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், எச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (1 லட்சம் டாலா்) கடந்த மாதம் உயா்த்தப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் அதிலும் குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிட்டிருந்த இந்தியர்களுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது. இந்த நிலையில், எச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட 1 லட்சம் டாலர் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதை திங்கள்கிழமை(அக். 20) அமெரிக்க குடிமையியல் மற்றும் இடம்பெயர்வு சேவைகள் தெளிவுபடுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, ஏற்கெனவே இவ்வகை விசா பெற்று அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோருக்கும், அதேபோல, விசா காலவரம்பு முடிவடையும் போது, காலஅவகாசத்தை நீட்டிக்க விரும்புவோருக்கும் இந்தப் புதிய கட்டண விதிகள் பொருந்தாது என்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
செப். 21-ஆம் தேதி முன்பு வரை எச்-1பி விசா பெற விண்ணப்பித்தவர்களுக்கு மேற்கண்ட உயர்த்தப்பட்ட விண்ணப்பக் கட்டண முறை பொருந்தாது எனவும், புதிய கட்டணம் அறிவிக்கப்பட்ட பின் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்குப் பொருந்தும் என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 21 அதிகாலை 12.01 மணிக்குப் பின்(அமெரிக்க நேரப்படி) புதிதாக எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் புதிய கட்டணம் செலுத்த வேண்டும்
சர்வதேச அளவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் எஃப்-1 விசா பெற்றுள்ளவர்கள், எல்-1 விசா பெற்றுள்ள சர்வதேச நிறுவனங்கள் ஆகிய தரப்பினர் எச்-1பி விசாவுக்கு மாற விரும்பினால் புதிய உயர்த்தப்பட்ட கட்டண விதிகள் பொருந்தாது.