ஒப்பந்தமா? தாக்குதலா? 24 மணிநேரத்தில் தெரியவரும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!
ஒப்பந்தமா? தாக்குதலா? 24 மணிநேரத்தில் தெரியவரும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...
ஒப்பந்தமா? தாக்குதலா? என்பது குறித்து இன்னும் 24 மணிநேரத்தில் தெரியவரும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “நாங்கள் கப்பல்களில் வெடிமருந்துகள், ஆயுதங்கள் ஏற்றும் பணியை மீண்டும் துவங்கியுள்ளோம். எங்கள் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாங்கள் முன்பு பயன்படுத்திய வெடிமருந்துகளைவிட திறம்பட செயல்படக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்தவிருக்கிறோம்.
Advertisement
இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த ஆயுதங்களையும் கப்பல்களில் ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.
தற்போது பயன்படுத்தக்கூடிய வெடிமருந்துகள், நாங்கள் முன்பு பயன்படுத்தியதைவிடவும் மிகச் சிறந்தவை. ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், அவர்கள் மீது இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தவிருக்கிறோம்.
இந்த ஆயுதங்கள் தாங்கிய கப்பல், இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஈரானுடன் ஒப்பந்தமா? அல்லது தாக்குதலா? என்பது குறித்து 24 மணிநேரத்தில் தெரியவரும்” என்றார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் சென்றுள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிக்குழுவும் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் டிரம்ப்பின் இத்தகையக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக, அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச அளவில் அழுத்தம் அதிகமானது.
இதனால், இருதரப்புக்கும் இடையில் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, கடந்த ஏப். 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இத்துடன், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் அரசு முன்வந்தது.
இதையடுத்து, பாகிஸ்தானின் அழைப்பை இருதரப்பும் ஏற்றுக்கொண்டன. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையில், இஸ்லாமாபாதில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க... தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!