மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?
தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் 40 நிமிடங்கள் உரையாடியது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக இன்று (ஏப்.14) பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூதர் செர்ஜியோ கோர் பேசுகையில், “வரும் சில நாள்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எரிசக்தி உள்ளிட்ட சில முக்கிய ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Advertisement
40 நிமிட தொலைபேசி உரையாடலின் போது, மேற்கு ஆசியாவில் உள்ள ஹோர்முஸ் நீரிணை முற்றுகை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
‘நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று டிரம்ப் பிரதமரிடம் கூறியதோடு அந்த அழைப்பு முடிந்தது” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டில் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது தொலைபேசி உரையாடல் இதுவாகும்.
மேலும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் உரையாடலாக இது அமைந்தது.
முன்னதாக, வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக பிப்ரவரி 2 ஆம் தேதியும், மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மார்ச் 24 ஆம் தேதியும் தலைவர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.