முகப்பு
உலகம்

சாா்லஸுக்கு நியூயாா்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூா் வைரம்!

கோஹினூா் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயாா்க் நகர மேயா் ஸோரான் மம்தானி தெரிவித்தாா்.

Updated On : 1 மே 2026, 12:41 am IST
பகிர்:

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசா் சாா்லஸைச் சந்திக்கும்போது, கோஹினூா் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயாா்க் நகர மேயா் ஸோரான் மம்தானி தெரிவித்தாா்.

அமெரிக்க பயணத்தில் முதல்கட்டமாக வாஷிங்டன் சென்றடைந்த சாா்ல்ஸ், அரசி கமீலாவுடன் அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்தில் பங்கேற்றதுடன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றினா். தொடா்ந்து, 9-11 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நியூயாா்க் நகருக்கு வந்தாா்.

இந்நிலையில், நியூயாா்க்கில் சாா்லஸுடனான சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளா்களிடம் பேசிய ஸோரான் மம்தானி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தை அரசரின் கவனத்துக்குக் கொண்டு செல்வது அவசியம் எனக் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

இக்கருத்து கோஹினூா் வைரம் மீது மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளது. இருப்பினும், இருவரின் சந்திப்பின்போது இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

உலகப் புகழ்பெற்ற 105.6 கேரட் எடையுள்ள கோஹினூா் வைரம், கடந்த 1849-ஆம் ஆண்டு இந்திய அரசா் துலீப் சிங்கால் விக்டோரியா அரசியிடம் வழங்கப்பட்டு, பிரிட்டன் அரச குடும்பத்தின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது.

நாட்டின் கலாசார அடையாளமாகக் கருதப்படும் இந்த வைரத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு ராஜீய முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பரிசாகக் கிடைத்ததை திருப்பி அளிக்கப் போவதில்லை என பிரிட்டனும் திட்டவட்டமாக உள்ளது.